வழக்கறிஞராக தொழில் நடத்த உரிமம் இல்லாதபோதிலும் வழக்கறிஞராக செயல்பட்டவருக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்த வழக்கறிஞர் சங்கத்துக்குத் தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய திருவாட்டி ஹெலன் சியா சுவீ இம்முக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டது.
உரிமம் பெற்ற வழக்கறிஞர் என்று தமது கட்சிக்காரரிடமும் அவரது தாயாரிடமும் தம்மை அறிமுகப்படுத்தி அவர்களிடம் திரு சியா $60,000 கடன் வாங்கியபோது உண்மையில் அவர் நொடித்துப்போனவர் என அறிவிக்கப்பட்டுஇருந்ததாகவும் வழக்கறிஞராக தொழில் நடத்த அவருக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விவாகரத்து வழக்கில் தமது பிள்ளையைத் தம்முடன் வைத்துக்கொள்ளும், வளர்க்கும் உரிமையை திருவாட்டி சியாவின் கட்சிக்காரர் கோரினார்.
அந்த வழக்கில் தம்மைப்
பிரதிநிதிக்க திருவாட்டி சியாவை அந்தப் பெண் நாடினார்.
திருவாட்டி சியாவின் ஆலோ
சனையின்படி தமது பிள்ளையை வளர்க்கும் உரிமை கோரி 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குடும்ப நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான சமரசப் பேச்சுவார்த்தை அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடை
பெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற ஒரு வாரம் இருந்தபோது தாம் நொடித்துப்போனவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மால் வழக்கறிஞராக தொழில் நடத்த முடியாது என்றும் தமது கட்சிக்காரரிடம் திருவாட்டி சியா கூறினார்.
நொடித்துப்போன நிலையி
லிருந்து மீண்டுவர திருவாட்டி சியாவுக்கு உதவும் வகையில் அவரது கட்சிக்காரர் அவருக்கு $40,000 கடன் வழங்கினார்.
ஆனாலும், திருவாட்டி சியாவால் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாததால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், தமது கட்சிக்காரரின் தாயாரிடமிருந்தும் திருவாட்டி சியா $20,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தாம் வேறொரு சட்ட நிறுவனத்தில் சேர்வதாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமது கட்சிக்காரரிடம் திருவாட்டி சியா கூறினார். தாம் சேரும் புதிய நிறுவனத்துக்கு வழக்கு மாற்றப்படும் என்று அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு இணக்கம் தெரிவித்த அவரது கட்சிக்காருக்கு திருவாட்டி சியா இன்னமும் நொடித்துப்போனவர் என்பதும் வழக்கறிஞராக தொழில் நடத்த உரிமம் இல்லாதவர் என்பதும் அப்போது தெரியாது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தப் பெண்ணைப் பிரிதிநிதிக்க திருவாட்டி சியாவுக்குப் பதிலாக இன்னொரு வழக்கறிஞர் நீதிமன்றம் வந்தார்.
அப்பெண்ணின் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மேல்முறையீடு செய்தார்.
2018ஆம் ஆண்டு மே மாதத்தில் திருவாட்டி சியா நொடித்துப்போன நிலையிலிருந்து மீண்டு வந்தார்.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை மேல்முறையீடு குறித்தும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது பற்றியும் திருவாட்டி சியாவும் அப்பெண்ணும் கலந்துரையாடினர்.
வாங்கிய கடனைத் திருவாட்டி சியா திருப்பிக் கொடுக்காததாலும் வழக்கில் திருவாட்டி சியாவின் செயல்பாட்டில் அப்பெண்ணுக்கு அதிருப்தி ஏற்பட்டதாலும் இருவருக்கும் இடையிலான உறவு கசந்தது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய வழக்கறிஞர்களின் சேவையை அப்பெண் நாடினார்.
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் திருவாட்டி சியா வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தார். 2019 ஆகஸ்ட் மாதத்தில் மேல்முறையீடு வழக்கு அப்பெண்ணுக்குச் சாதகமாக முடிந்தது.
ஒருமாதம் கழித்து, திருவாட்டி சியாவுக்கு எதிராக அவர் வழக்கறிஞர் சங்கத்தில் புகார் செய்தார்.