இணையத்தில் பெண்ணாக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாலியல் சேவை நாடி, தாம் விரித்த வலையில் 17 வயது சிறுவனைச் சிக்க வைத்த ஆடவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளையரின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 26 வயது முகம்மது அல் மஸ்ஃபுயின் முசின் இணையத்தில் தம்மை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்திக்கொண்டு தமக்கும் தமது காதலருக்கும் பாலியல் சேவை வழங்கும் ஒருவர் தேவை என்று பதிவிட்டிருந்தார். அதற்காக $250 வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதை நம்பி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று தெம்பனிஸ் வட்டாரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு அந்தச் சிறுவன் சென்றார். அந்தச் சிறுவன் ஏற்கெனவே வீட்டைவிட்டு விரட்டப்பட்டவர். இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுவனிடம் 'பாலியல் சேவை நாடிய பெண்'ணின் காதலராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அல்மஸ்ஃபுயின், அவரை அந்த வீட்டில் தங்க அனுமதித்தார். சிறுவனக்கு தங்க இடம் கொடுத்ததற்காக அவனுடன் அல் முஸ்ஃபுயின் பாலியல் உறவு கொண்டார். அதற்காக அந்த சிறுவனிடம் அவர் $50 கொடுத்தார். அவருடன் பாலியல் உறவு கொண்டபோது அச்சிறுவன் வயது குறைந்தவன் என்பது அவருக்குத் தெரியும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் அந்தச் சிறுவன் லொகான்டோ எனும் விளம்பர இணையப்பக்கத்தைப் பயன்படுத்த தொடங்கியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். பாலியல் சேவை நாடுவோர் பதிவேற்றம் செய்த விளம்பரங்கள் பற்றி அதிலிருந்து அவர் தெரிந்துகொண்டார். பாலியல் சேவை வழங்கி பணம் சம்பாதிக்க அந்தச் சிறுவன் முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தோ பாயோ வட்டாரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட போலிஸ் அதிகாரி அச்சிறு வனின் கைபேசியைச் சோதனையிட்டபோது அவன் பாலியல் சேவை வழங்கிய விவரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அல் முஸ்ஃபுயின் கைதானார்.

