பெண் பயணியை மானபங்கம் செய்த குற்றத்துக்காக முன்னாள் பகுதிநேர டாக்சி ஓட்டுநருக்கு 13 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தர
விடப்பட்டுள்ளது. மானபங்கக் குற்றம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதியன்று நிகழ்ந்தது. தமது நண்பர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு அந்தப் பெண் 56 வயது ஹாஜி முகம்மது யூசோஃப் ஏ.பி.எம். ஆடமின் டாக்சியில் ஏறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்த அப்பெண் பயணத்தின்போது தூக்கத்தில் ஆழ்ந்ததாக வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணி அளவில் அப்பர் பாய லேபார் சாலைக்கு அருகில் உள்ள லோராங் ஆ சூ வட்டாரத்தில் இருக்கும் வாகன நிறுவனத்தை டாக்சி அடைந்ததை அடுத்து அப்பெண்ணை யூசோஃப் மானபங்கம் செய்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார். யூசோஃப் தம்மைத் தொடுவதை உணர்ந்ததும் அப்பெண் கத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் இருக்கைக்குத் திரும்பி யூசோஃப் அப்பெண் செல்ல வேண்டிய இடத்துக்கு டாக்சியை ஓட்டினார். யூசோஃப் தம்மை மானபங்கம் செய்தது குறித்து அப்பெண் பிறகு போலிசில் புகார் செய்தார். அந்தப் பெண்ணைத் தாம் தொடவில்லை என்றும் அவர் செல்லவிருந்த இடத்தை அடைந்ததும் அவரைக் கூப்பிட்டு எழுப்ப முயன்றதாகவும் யூசோஃப் வாதிட்டார். பிறகு டாக்சியைவிட்டு இறங்கி பின் கதவைத் திறந்து எழுந்திருக்குமாறு அப்பெண்ணிடம் கூறியதாக யூசோஃப் தெரிவித்தார். அதையடுத்து, அப்பெண் தூக்கத்திலிருந்து எழுந்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாறுபட்டிருந்தது. மேலும் சம்பவம் நடந்ததை நேரில் கண்ட சாட்சிகளும் இல்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலமும் அவர் முன்வைத்த ஆதாரங்களும் நம்பகமானதாக இருந்ததாக நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பை எதிர்த்து யூசோஃப் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு $10,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.