மரினா பே சேண்ட்ஸ் ஒருங்கிணைந்த உல்லாசத்தளத்தில் முகக்கவசம் அணிய மறுத்த பெண் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்படவில்லை.
இப்போதைக்கு, மரினா பே சேண்ட்ஸ், பிராஸ் பசா வணிக வளாகம் போன்ற பொது இடங்களிலும் நீதிமன்றக் கட்டடத்திற்கு வெளியிலும் முகக்கவசம் அணியத் தவறியது உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை, பூன் சியு யோக், 53 (படம்) என்ற இம்மாது எதிர்நோக்கியுள்ளார்.
பூன் சார்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடக் கோரி விண்ணப்பிக்க விரும்புவதாக பூன் நீதிமன்றத்தில் கூறினார்.
தாம் ஒரு முன்னாள் கடற்படை அதிகாரி என வலியுறுத்திக் கூறிய ஃபூன், சிங்கப்பூர் ஆயுதப் படை தொடர்பான முன்னைய வழக்குகளில் தாம் ஒரு சாட்சியாக அல்லது வாதியாக இருந்துள்ளதாகவும் இந்த வழக்குகளால் தாம் நியாயமான விசாரணையை எதிர்நோக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், முன்னைய வழக்குகளுக்கும் அவர் மீதான இப்போதைய குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லை என்று நீதிபதி ஜேனட் வாங் குறிப்பிட்டார்.
கடந்த மே 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட பூன், பின்னர் $8,000 பிணைத்தொகையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

