புளோக் 123 அங் மோ கியோ அவென்யூ 6ல் இன்று காலை கடும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் பற்றி தங்களுக்கு காலை 9.40 மணி அளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
புளோக்கின் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் மோசமான தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து ஒரு நபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது.
புளோக் 123ல் இரண்டிலிருந்து நான்காவது மாடி வரை AWWA அமைப்பின் தாதிமை இல்லம் அமைந்திருக்கிறது.
குடிமைத் தற்காப்புப் படையினர் செல்வதற்கு முன்பே, அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்டனர். புளோக்கின் 5ஆம் முதல் 9ஆம் மாடி வரை வசிக்கும் சுமார் 130 குடியிருப்பாளர்களை தனது படையினர் பாதுகாப்பாக வெளியேற்றியதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
புகையாலும் தலைசுற்றலாலும் பாதிக்கப்பட்ட ஏழு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.