அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் ரத்தம், கண்ணாடிச் சிதறல்

1 mins read
5fe43f94-67c0-472f-bf48-5f35773b67f6
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 காரணத்தால் அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. மீண்டும் இன்று (ஜூன் 16) அதன் கதவுகளைத் திறந்தது கடைத்தொகுதி. ஆனால், ஒரு கடையின் கண்ணாடிப் பகுதி சிதறியதால் அக்கடை ஊழியர் காயமடைந்தார்.

'போபி பிரவுன்' என்ற ஒப்பனைச் சாதனங்கள் விற்கும் கடைக்குரிய ஊழியர் அட்டையை, அந்தக் காயமடைந்தவர் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரின் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு முற்பகல் 11.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வந்திருந்தனர். சிதறிய கண்ணாடித் துண்டுகளுக்கிடையே ரத்தச் சொட்டுகளும் காணப்பட்டன.

காயமடைந்த ஊழியர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

கடைத்தொகுதி கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்