உலக வரிவிதிப்பு முறையை சீர்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கையும் உலகளாவிய குறைந்தபட்ச நிறுவன வரி விகிதமும் புரிந்துகொள்ளக்கூடியதே என்றபோதிலும் இதற்கான முடிவுகளை ஜி7 நாடுகள் மட்டும் எடுத்துவிட முடியாது என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இது குறித்த உலகளாவிய கருத்திணக்கத்தில் சிறியதும் பெரியதுமான எல்லா நாடுகளும் ஈடுபட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
இவ்வாறு செய்வது எல்லா வகையான நிபந்தனைகளுக்கு மத்தியில் வரி சீர்திருத்தத்தை உறுதி செய்ய உதவும் என்று நேற்று நடத்தப்பட்ட சிஎன்பிசி உலக மாநாட்டில் பேசும்போது திரு வோங் குறிப்பிட்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிவிதிப்பு உடன்பாட்டுக்கு உலகின் பணக்கார நாடுகளின் அமைப்பான ஜி7 ஒப்புதல் வழங்கிய ஒரு வார காலத்திற்குப் பிறகு சிங்கப்பூர் நிதி அமைச்சரின் கருத்து வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள வரிவிதிப்புமுறையை ஒருங்கிணைக்க அனைத்துலக அளவிலான ஆழமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றார் அவர்.
"இங்கு இதுபோன்ற புதிய விதிகள் கொண்டு வரப்படின், உலகக் கருத்திணக்கத்திற்கு ஏற்பவும் இங்குள்ள வர்த்தக சமூகத்தின் ஆலோசனைக்கு ஏற்பவும் சிங்கப்பூர் தனது வரிவிதிப்பு முறையை சரிசெய்யக்கூடும்", என்று குறிப்பிட்டார் திரு வோங்.

