$10,800 பற்றுச்சீட்டுகளை திருடியவருக்கு 84 வாரம் சிறை
சுமார் $10,800 மதிப்புள்ள மளிகைப் பொருள் பற்றுச்சீட்டு களைத் திருடிய ஆடவருக்கு 84 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது ஸுல்கிஃப்லி முகமது யாத்தீம் கடந்த ஆண்டு அக்டோபரில், வரவு செலவுத் திட்டம் 2020இன் கீழ் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளைத் திருடினார்.
சுமார் $2,250 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைத் திருடியதற்காக ஸுல்கிஃப்லி மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. மீதமுள்ள பற்றுச்சீட்டுகளைத் திருடியதில் பங்கு வகித்ததற்காக மேலும் 58 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அத்துடன் தமது வளர்ப்பு மகனைத் தாக்கிய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஸுல்கிஃப்லி, அவர் தமது மனைவி டாண்டி யொஹைடா சமாட் இருவரும் சேர்ந்து மார்சிலிங்கில் உள்ள அஞ்சல் பெட்டிகளை கம்பியால் நெம்பித் திறந்து பற்றுச்சீட்டுகளைத் திருடினர். மனைவி தீட்டிய திட்டத்தைக் கணவர் ஏற்றுக்கொண்டிருந்தார். திருட்டில் மொத்தம் 72 பேர் பற்றுச் சீட்டுகளைப் பறிகொடுத்தனர் என்று அரசாங்க வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
ஸுல்கிஃப்லியின் மனைவி டாண்டிக்கு குற்றங்களின் தொடர்பில் முன்னதாக 48 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உணவங்காடி நிலைய கட்டடங்கள் பற்றிய புகைப்படத் தொடர்
உணவங்காடி நிலையங்களின் அழகிய கட்டடக் கலை அம்சங்களைக் காட்டும் புகைப்படத் தொடரை தேசிய மரபுடைமைக் கழகம் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.
தெம்பனிஸ் உணவங்காடி நிலையத்தின் வட்டமான கூரை, அலை அலையாய் விரியும் பாசிர் ரிஸ் உணவங்காடி நிலையத்தின் முன்பக்கம், கம்பத்து வீட்டு வடிவில் உள்ள கேலாங் செராய் உணவங்காடி நிலையம் போன்றவை அதில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.
தொடருக்காக 12 உணவங்காடி நிலையங்களின் 100 படங்கள் எடுக்கப்பட்டன. உணவங்காடி நிலையக் கலாசாரத்தைப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் எடுத்துவரும் தனது முயற்சிகளில் புகைப்படத் தொடரும் ஒன்று என தேசிய மரபுடைமைக் கழகம் கூறியது.
www.roots.gov.sg இணையத் தளத்துக்குச் சென்று புகைப்படங்களைக் காணலாம்.
அரிசி அளவில் இயந்திர மனிதன்
ஓர் அரிசி மணி அளவுக்கு சிறிய இயந்திர மனிதனை இங்குள்ள அறிவியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தற்போதுள்ள இயந்திர மனிதர்கள் செல்ல முடியாத சிறிய இடங்களிலும் சிக்கலான வழிகளிலும் அந்த இயந்திர மனிதனால் நுணுக்கமாக நகர்ந்து செல்ல முடியும். வருங்காலத்தில் அதனை மூளை அறுவை சிகிச்சை போன்றவற்றில் மருத்துவத் துறையில் பயன்படுத்த ஆய்வாளர்கள் திட்டமிடுகின்றனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இயந்திர, விண்வெளிப் பொறியியல் துறை ஆய்வாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கினர். மனிதர்களுக்கு கேடு விளைவிக்காத மூலப்பொருட்களில் காந்தசக்தி வாய்ந்த சிறிய துகள்களை ஆய்வாளர்கள் பொருத்தினர். காந்த சக்தி இயக்கப்பட்டால் ஒருவர் இயந்திர மனிதனை இயக்கி செயல்படுத்தலாம்.