சமூக அளவில் 19 பேர் உட்பட சிங்கப்பூரில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 19 பேரில் 16 பேர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.
அவர்களில் 10 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. எஞ்சிய அறுவருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,339 ஆக உள்ளது.
தெலுக் பிளாங்கா டிரைவ்
உணவு நிலையம் மூடப்பட்டது
இவ்வேளையில் தெலுக் பிளாங்கா டிரைவ் புளோக் 79ல் உணவங்காடிக் கடைக்காரர் ஒருவருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதைத் தொடர்ந்து உணவு நிலையம் நேற்று மூடப்பட்டது.
நாளை வரை நிலையம் மூடப்பட்டு அங்கு முழுமையான சுத்திகரிப்புப் பணியும் கிருமி நாசினித் தெளிப்பும் மேற்கொள்ளப்படும்.
அந்த 42 வயது உணவங்காடிக் கடைக்காரருக்கு சனிக்கிழமை 12ஆம் தேதி உடல்வலியும் ஞாயிற்றுக்கிழமை 13ம் தேதி காய்ச்சலும் ஏற்பட்டது. பின்னர் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. புக்கிட் மேரா உணவங்காடி நிலையத்தில் கிருமி தொற்றிய ஊழியரின் குடும்ப உறுப்பினர் இவர்.
புக்கிட் மேரா வியூ உணவங்காடி நிலையத்தில் 9 பேருக்கு தொற்று
புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் உருவாகியுள்ள தொற்றுக் குழுமத்தில் மேலும் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள உணவுக் கடையில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அவர்களது குடும்பத் தொடர்புகள் ஆவர்.
இவர்களையும் சேர்த்து தொற்றுக் குழுமத்தில் இதுவரை 25 பேர் உள்ளனர்.
சுத்திக்கரிப்புப் பணிக்காகவும் தொற்று பரவுவதை நிறுத்தவும் உணவங்காடி நிலையம் வரும் 26ஆம் தேதி வரை மூடப்படும்.