செமாக்காவ் தீவில் 112 காற்பந்துத் திடல்கள் அளவுக்கு பெரிய சூரிய சக்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுப்பட்டு வருகிறது.
அதன் தொடர்பில் ஜேடிசி அமைப்பும் ஷெல் நிறுவனமும் நேற்று இருதரப்பையும் கட்டுப்படுத்தாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சூரிய சக்தி ஆலைக்கான திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. திட்டத்துக்கு எரிசக்தி சந்தை ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் ஆதரவு அளித்துள்ளன.
முழுமை பெற்றால், இவ்வாண்டு முற்பகுதியில் அறிவிக்கப்பட்ட தெங்கா நீர்தேக்க சூரிய சக்தி ஆலையைவிட இது இரண்டு மடங்குக்கு மேல் பெரிதாக இருக்கும். அதைவிட இந்த செமாக்காவ் ஆலை கூடுதல் சூரிய சக்தியைஉற்பத்தி செய்யும் என்று கூறப்பட்டது.
செமாக்காவ் ஆலையில் 72 மெகாவாட்-பீக் (MWp) அளவுக்கு எரி்சக்தியை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அது 17,500 வீடு களுக்கு எரிசக்தியை வழங்கும் ஆற்றல் பெற்றது.
வரும் 2025க்குள் 260,000 இல்லங்களுக்குத் தேவையான சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் சிங்கப்பூரின் இலக்கை அடைய இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.
செமாக்காவ் தீவில் மட்டும்தான் சிங்கப்பூரில் குப்பை எரிக்கப்பட்ட சாம்பல் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கை தொடரும்.
அத்துடன் செமாக்காவ் தீவில் உள்கட்டமைப்பும் போக்குவரத்து வசதியும் குறைவாக இருப்பது திட்டத்துக்கான சவால்கள் ஆகும். இதுபோன்ற சூழலில் இவ்வளவு பெரிய சூரிய சக்தி ஆலை திட்டமிடப்படுவது இதுவே முதல் முறை.
செமாக்காவ் தீவு ஆலை, கரியமில வெளியேற்றத்தை ஆண்டுக்கு 37,000 டன் அளவுக்குக் குறைக்க உதவும் என்று திட்டத்தில் பங்கு வகிக்கும் ஜேடிசி, ஷெல் நிறுவனம் உள்ளிட்ட நான்கு அமைப்புகளும் தெரிவித்தன.

