பிரச்சினைக்குத் தீர்வு தேவை என மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது வலியுறுத்து
உணவு, பானத் தொழில்துறையில் தடுமாறி விழுவது, கீழே விழுவது, சறுக்கி விழுவது போன்ற சம்பவங்களில் ஊழியர்கள் காயம் அடைவது அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு, கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரி 12% ஆக இருந்து வந்துள்ளது. இந்தத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் காயம் அடைய இவையே முக்கிய காரணங்களாக இருந்து வந்துள்ளன.
இந்த நிலவரம் கவலை தருகிறது என்றும் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இந்தத் துறையில் வேலை இட காயங்கள் 2016 முதல் 2019 வரை ஆண்டுக்குச் சராசரியாக 9% கூடி வந்துள்ளன.
கொவிட்-19 காரணமாக சென்ற ஆண்டு வேலை இடங்கள் செயல்படாமல் சுணங்கி இருந்ததால் இத்தகைய சம்வங்கள் குறைந்தன.
இந்தத் துறையில் சென்ற ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் 985 ஊழியர்கள் காயம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2019ல் 1,167 ஆக இருந்தது. 2018ல் இது 932 ஆக இருந்தது.
இத்தகைய போக்கு கவலை தருகிறது என்றும் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நேற்று மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மூத்த துணை அமைச்சர் தெரிவித்தார்.
வேலை இட பாதுகப்பு, சுகாதார மன்றம் ஏற்பாடு செய்த அந்தக் கருத்தரங்கில் பேசிய திரு ஸாக்கி முகம்மது, நல்ல வேலை இட பாதுகாப்பும் சுகாதார ஏற்பாடுகளும் நல்ல தொழில் சூழலுக்கு அடையாளம் என்று கூறினார். விபத்து நிகழக்கூடிய சூழலில் வேலை பார்க்க யாருமே விரும்ப மாட்டார்கள் என்பதை அவர் சுட்டினார்.
முதலாளிகளைப் பொறுத்தவரை வேலை இடம் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இதர பல பயன்களும் உண்டு.
அதேபோல் ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று திரு ஸாக்கி முகம்மது விளக்கினார்.
எல்லா துறைகளிலுமே தடுமாறி விழுவது, கீழே விழுவது, சறுக்கி விழுவது போன்ற சம்பவங்களால் ஊழியர்கள் பலத்த காயம் அடைவது அதிகமாகி வருகிறது.
ஆகையால் நேற்றைய கருத்தரங்கை ஒட்டி புதிய வருடாந்திர இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.
ஊழியர்கள் வேலை இடங்களில் காயம் அடைவதைத் தவிர்ப்பது பற்றிய புரிந்துணர்வு மேம்பட அந்த இயக்கம் உதவும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.

