உள்ளரங்கில் முகக்கவசம் அணியாமல் ஜூன் 21 முதல் இரண்டு பேர் கொண்ட குழுவுடன் விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும் தொடங்க அனுமதிக்கப்படும். முன்னதாக ஐவர் கொண்ட குழுக்களாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அண்மையில் புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவு நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய கொவிட்-19 குழுமத்தையும் இதர புதிய கொவிட்-19 சம்பவங்களையும் கருத்தில் கொண்டு குழுவில் ஐவருக்குப் பதிலாக இருவர் என்று குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளரங்கில் முகக்கவசம் இல்லா நடவடிக்கைகளுக்கான வகுப்புகளில், பயிற்றுநர் உட்பட 30 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. நபர்களுக்கிடையே குறைந்தது இரண்டு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருக்க வேண்டும். குழுக்களுக்கிடையே மூன்று மீட்டர் இடைவெளி இருத்தல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளரங்கில் முகக்கவசம் அணிந்திருப்பவர்களும் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணியாதிருப்பவர்களும் தொடர்ந்து தங்களின் நடவடிக்கைகளில் ஐவர் கொண்ட குழுக்களாக பங்கேற்கலாம். உடலுறுதிக் கூடங்களின் ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு ஒருமுறை விரைவு ஆன்டிஜென் சோதனை முறையில் கொவிட்-19 கட்டாய பரிசோதனை செய்யப்படும்.

