பொருளியல், சமூக நடவடிக்கைகளை மீண்டும் துவங்கும்போது எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று கூறியுள்ளது கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழு. இவ்வாறு எச்சரிக்கையுடன் செயல்படும்போது மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் கிடைப்பதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகாத நிலை, அல்லது ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே பதிவாகும் நிலை வரும்வரை காத்திருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடரலாம். ஆனால் இவ்வாறு செயல்பட்டால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பல மாதங்களுக்கு நீடிக்கும் நிலை ஏற்படலாம் என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
ஏன், கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு மீண்டும் அவற்றை விதிக்கும் நிலை கூட வரலாம் என்றார் அவர்.
தற்போதைய நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடுவதே சிறந்த தீர்வாக உள்ளதென சுகாதார அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டார்.
இந்நிலையில். ஆகஸ்ட் மாதத்திற்குள் 50% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று தடுப்பூசி விகிதத்திற்கான தம் இலக்கைத் தெரிவித்தார் திரு வோங்.