உணவு, பானக் கடைகள், உணவங்காடிக் கடைக்காரர்கள், பாதிக்கப்பட்ட இதர துறைகள்
கொவிட்-19 கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட உணவு, பானத் துறையினர், உணவங்காடிக் கடைக்காரர்கள் போன்றவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவு நீட்டிக்கப்படும் என்று கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நேற்று தெரிவித்தது.
பல்வேறு நடவடிக்கைகளில் கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் ஜூலை மாதம் நடுப்பகுதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு கூறியதன் தொடர்பில் மேற்கண்ட ஆதரவு நீட்டிப்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. வேலை ஆதரவுத் திட்டத்தின் தற்போதைய மேம்பாடுகள் அடுத்த மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படும். அதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த விகிதம் 10 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும்.
அப்படி என்றால், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் உள்ள உணவு, பானத் துறை, உடலுறுதிக் கூடங்கள் போன்றவற்றுக்கும் படைப்புக் கலைகள் மற்றும் கலைக் கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் 50% வேலை ஆதரவுத் திட்டத்தின் வழங்கு தொகை கிடைக்கும். அது ஜூலை 12ஆம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு 10 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
இதற்கிடையே, குறிப்பிடத்தக்க பாதிப்படைந்த துறைகளான சில்லறை வர்த்தகம், திரையரங்குகள், அரும்பொருளகங்கள், கலைக் காட்சிக்கூடங்கள், வரலாற்றுத் தலங்கள், குடும்ப கேளிக்கைக் கூடங்கள் போன்றவற்றுக்கு இம்மாதம் 21 முதல் வேலை ஆதரவுத் திட்டத்தின் 30% வழங்குதொகை கிடைக்கும். பின்னர் ஜூலை 12ஆம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு 10 விழுக்காடாகக் குறைக்கப்படும். சுய தொழில் செய்யும் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் உதவி வழங்கும் வகையில், மேசையைச் சுத்தம் செய்தல், ஒருங்கிணைக்கப்பட்ட தட்டு கழுவும் சேவைகள் ஆகியவற்றுக்கான கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த கட்டணக் கழிவை அரசாங்கம் நீட்டிக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
மேலும் தேசிய சுற்றுப்புற வாரியம் அல்லது வாரியத்தால் நியமிக்கப்பட்ட நடத்துநர்கள் நிர்வகிக்கும் உணவங்காடி நிலையங்களில் உள்ள உணவுக் கடைக்காரர்களுக்கு ஜூலை நடுப்பகுதி வரை வாடகைக் கழிவு அளிக்கப்படும்.
நீட்டிக்கப்பட்ட கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட இதர ஊழியர்களுக்கு, கொவிட்-19 மீட்சிக்கான தற்காலிக மானியம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படும்.
தற்போது அந்த மானியத்தைப் பெற்று வருவோர், ஜூலையில் கிடைக்கும் இரண்டாம் சுற்று ஆதரவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அளிக்கும்.

