கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நம்முடைய கொள்கைகளும் மனப்போக்கும் மாறக்கூடிய வகையில் சிங்கப்பூரர்கள் மக்கள் தொகை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இது அவசியம் என்று அவர் கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை பற்றி தெரிவித்த பிரதமர், முதல் அறிக்கை புதன்கிழமையும் இரண்டாவது அறிக்கை நேற்றும் வெளியிடப்பட்டதைச் சுட்டினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
நாடு சுதந்தரம் அடைந்தது முதல் இப்போதைய கணக்கெடுப்பையும் சேர்த்து இதுவரை ஆறு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 2010 முதல் 2020-வரைப்பட்ட பத்து ஆண்டுக் காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் ஆகக்குறைவான வேகத்தில் இருக்கிறது.
ஒற்றையராக இருந்து வரும் சிங்கப்பூர்கள் முன்னிலும் அதிகம். மணமானவர்கள் பெற்றுக்கொண்ட பிள்ளைகளும் குறைவு. இன விகிதாச்சார அளவு நிலையாக இருக்கிறது. முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அவர்களில் தனித்து வாழ்வோர் முன்னிலும் அதிகம்.
கல்வியில் மக்கள் முன்பைவிட சிறந்துள்ளனர். வீடுகளில் ஆங்கிலமே அதிகம் பேசப்படுகிறது. சமயம் சாராதவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். குடும்ப சராசரி வருவாய் அதிகரித்துள்ளது.
வீட்டு உடைமை தொடர்ந்து அதிகமாகவே இருந்துவருகிறது என்று தெரிவித்த பிரதமர், சமூகத்தில் இடம்பெறும் இந்தப் போக்கு களைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.


