சிங்கப்பூர் வாசிகளான ஊழியர் கள் வேலை பார்க்க நகர மையம்தான் தொடர்ந்து கவர்ச்சிகரமான இடமாக இருக்கிறது. இளையர்களும் அங்குதான் வேலை பார்க்க விரும்புகிறார்கள்.
15 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 284,000 ஊழியர்கள்- அதாவது இங்கு வேலை பார்க்கும் குடிமக்கள், நிரந்தரவாசிகளில் 12.9 விழுக்காட்டினர்- சென்ற ஆண்டில் சிங்கப்பூரின் நிதி, வர்த்தக மையமாகத் திகழ்கின்ற நாட்டின் மத்திய பகுதியில் உள்ள அலுவலகங்களில்தான் வேலை பார்த்தனர்.
குவீன்ஸ்டவுன், கேலாங், புக்கிட் மேரா ஆகியவை வேலை பார்க்க விரும்பப்படும் இடங்களில் அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றிலும் 100,000 பேருக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் வாசிகள் வேலை பார்த்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
நாட்டின் மத்திய பகுதி இளையர்களை அதிகம் ஈர்க்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில் இதர ஒன்பது இடங்கள், சென்ற ஆண்டில் வேலை பார்த்த சிங்கப்பூர் வாசிகளில் குறைந்த பட்சம் 10 விழுக்காட்டினரைக் கவர்ந்தன.
அவர்களுக்கு வயது 65 மற்றும் அதற்கும் அதிகம். புக்கிட் பாஞ்சாங், ரோச்சோர், மரின் பரேட், பீஷான், ஹவ்காங், புக்கிட் தீமா, ஊட்ரம், பிடோக், சுவா சூ காங் ஆகியவை அவற்றில் அடங்கும்.
மத்திய வட்டாரத்தில் வேலை பார்ப்போரில் 86.2% உயர்நிலைக்குப் பிந்தைய கல்வி கற்றவர்கள். வேறு எங்கும் இந்த நிலவரம் இல்லை.
மத்திய, கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிங்கப்பூர் வாசிகள் வேலை பார்க்க விரும்பும் இடமாகவும் சென்ற ஆண்டு மத்திய பகுதி திகழ்ந்தது.
இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஊழியர்களில் 9.8% முதல் 21.3% வரைப்பட்டவர்கள் அந்தப் பகுதியில் வேலை பார்த்தனர் என்பது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் வாசிகளான ஊழியர்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினரைப் பொறுத்தவரை அவர்கள் வேலை பார்க்கும் இடமும் வீடும் வேவ்வேறு இடங்களில் இருந்தன.
முதிய ஊழியர்கள் தங்கள் வீடுகள் இருக்கும் அதே பகுதியில் வேலை பார்க்க அதிகம் விரும்புகிறார்கள், அல்லது வேலை பார்க்க குறிப்பிட்ட இடத்தை அவர்கள் விரும்புவதில்லை என்று மக்கள்தொகை அறிக்கை தெரிவிக்கிறது.


