சிங்கப்பூரில் 866 மோசடி சம்பவங்களின் தொடர்பில் போலிசார் 311 பேரை விசாரித்து வருகின்றனர். அச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 8.2 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்துள்ளனர்.
விசாரிக்கப்பட்டு வருபவர்களில் 219 பேர் ஆடவர்கள். 92 பேர் பெண்கள். அனைவரும் 16 வயதுக்கும் 84 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
இரண்டு வார நடவடிக்கை
கடந்த 5ம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை 18ம் தேதி வரை போலிசார் மேற்கொண்ட நடவடிக்கை களின் விளைவாக, இணைய வழியான காதல் மோசடி, அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம், பொய்யான சூதாட்டத் தளங்கள் அமைத்தல் உள்ளிட்ட மோசடிகள் கண்டறியப்பட்டன.
பணமோசடி பற்றி விசாரணை
ஏமாற்றுவேலை, பணமோசடி, அல்லது உரிமம் இல்லாமல் கட்டணச் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட குற்றங்களின் தொடர்பில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மோசடிக் குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
பண மோசடி செய்வோருக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அல்லது $500,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் உரிமம் இன்றி கட்டணச் சேவைகளை வழங்கும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 125,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
துணைபோவதைத் தவிர்க்கவும்
இக்குற்றங்களில் துணை போவதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கை அல்லது கைபேசி எண்களைப் பயன்படுத்திக்கொள்ள மற்றவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அவற்றுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என்று போலிசார் கூறினர்.