சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள்.
இரண்டு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சமூகத்தொற்று ஏற்பட்டவர்களில் ஐந்து பேருக்குத் தொடர்பில்லா தொற்று காணப்பட்டது.
நால்வருக்கு முன்பு கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பு இருந்தது.
இவர்களில் மூவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
மற்றொருவர் பரசோதனை மூலம் கண்டறியப்பட்டார். வெளி நாட்டில் இருந்து வந்த இரண்டு பேருக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவர் இங்கு திரும்பி வந்த சிங்கப்பூரர்.
ஊழியர் தங்குவிடுதிகளில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 62,414 ஆகக் கூடியது.
சிங்கப்பூர் தனது பொருளியலை இன்று மேலும் திறந்து விடுகிறது.
உணவகங்களில் அமர்ந்து உண்ண இன்று முதல் அனுமதி உண்டு என்றாலும் இரண்டு பேர் வரைதான் சேர்ந்து அமர்ந்து சாப்பிட முடியும் என்ற வரம்பு நடப்பில் இருந்துவரும்.
ஐந்து பேர் வரை சேர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம் என்று தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது.
ஆனால் இப்போதைய தொற்று நிலவரங்களைக் கவனத்தில் கொண்டு அந்தத் திட்டம் ஜூலை நடுப்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் தலைதூக்கி உள்ள தொற்றுக் குழுமத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமை யாகப் போராடி வருகிறார்கள்.
சிங்கப்பூரில் சென்ற வாரம் உள்ளூரில் 94 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தில் 41 ஆக இருந்தது.

