சமூகத்தில் 13 பேர் உட்பட புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட அந்த 13 பேரில் எண்மர், முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். எஞ்சிய ஐவரும் இப்போதைக்குத் தொடர்பின்றி கொரோனா தொற்றியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக எவரையும் கிருமி தொற்றவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மூவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்ததும் வீட்டிலேயே இருப்பதற்கான கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் 11 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
அவர்களில் நிதி ஆலோசகர், பல்மருத்துவ உதவியாளர், வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பொறியாளர், பணிஓய்வு பெற்ற இருவர் என தொடர்பில்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளான ஐவர் அடங்குவர்.
இம்மாதம் 12ஆம் தேதிக்குப் பிறகு, ஒரு நாளில் பதிவான தொடர்பில்லாப் பாதிப்புகளில் இதுவே ஆக அதிகம். 12ஆம் தேதியன்றும் இப்படி ஐவரைத் தொடர்பில்லாத வகையில் கொரோனா தொற்றியது.
அந்த ஐவரில் ஆக இளையவர், ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள கியூ அண்ட் எம் பல்மருத்துவ அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் 22 வயதுப் பெண்.
வேலை நேரத்தின்போது அவர் முழுமையான தனிநபர் பாதுகாப்பு அங்கி அணிந்திருப்பார் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை 70ஆக இருந்த புக்கிட் மேரா வியூ உணவு நிலையக் கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 73ஆக உயர்ந்தது. புதிதாகத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மூவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் இதுவரை 62,430 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 34 பேர் இறந்துவிட்டனர். கிருமி தொற்றியிருந்தபோது வேறு உடல்நலக் கோளாறுகளால் 15 பேர் மாண்டுபோயினர்.
நேற்று முன்தின நிலவரப்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் உட்பட 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 196 பேர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் இருந்தவாறு உடல்நலம் தேறி வருகின்றனர்.

