ப. பாலசுப்பிரமணியம்
நிச்சயமற்ற தற்போதைய கொவிட்-19 சூழலில் மனதை நிலைபடுத்திக் கொண்டு தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் முக்கியமாகியுள்ளது.
இதனை உணர்ந்து தீவிலுள்ள பல்வேறு அமைப்புகள் யோகா போன்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
'யோகாவுடன் இருங்கள், வீட்டில் இருங்கள்' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டின் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரு வாரம் முழுக்க சிங்கப்பூர் இந்தியத் தூதரகம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுச் செய்தது.
கடந்த ஜூன் 14 தேதி முதல் அனைத்துலக யோகா தினமான ஜூன் 21 வரையில், யோகா பயிற்சியின் தொடர்பாக 170க்கும் மேற்பட்ட இணையத் தொடர்கள், போட்டிகள், புதிர் அங்கங்கள் நடத்தப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியாக கடந்த திங்கள் 14ம் தேதி சன்லவ் இல்லத்துடனும் யோகா லயிப்ஃப்ரரி எனும் யோகா பயிற்சி அமைப்புடனும் சேர்ந்து ஸூம் மெய்நிகர் சந்திப்பு தளத்தில் யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சன்லவ் இல்லவாசிகள், ஊழியர்கள், சன்லவ் மூத்தோர் நடவடிக்கை நிலையத்திற்கு வரும் முதியவர்கள் ஆகியோர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இருக்கையில் அமர்ந்தவாறே அவர்கள் 45 நிமிட பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன், அனைவரையும் கொண்டாட்டத்தில் இணைக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள், மூத்தோர், உடல்குறையுள்ளோர், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.
"நம்மை சுற்றி மனஉளைச்சல் தரக்கூடிய சம்பவங்கள் நிகழும்போது, மனதை நிலைப் படுத்த யோகா பயிற்சி உதவுகின்றது. வீட்டில் பல மணிநேரம் கணினித் திரைகளின் முன் வேலை செய்கையில், கழுத்து, முதுகு பிரச்சினைகள் வருகின்றன. யோகாவில் ஈடுபடுவதால் சிந்தனை தெளிவாகிறது. உடல் புத்துணர்வையும் வளையும் ஆற்றலையும் பெறுகிறன்றது," என்று விளக்கினார் யோகா லயிப்ஃப்ரரி அமைப்பின் நிர்வாகி ரிச்சிகா பத்னி, 38.
சன்லவ் மூத்தோர் நடவடிக்கை நிலையத்திற்கு வரும் முதியோர் வாரத்தில் ஒருமுறையாவது யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதாகக் கூறினார் சன்லவ் இல்ல தலைமை திட்ட அதிகாரி திரு க.ராஜமோகன். தற்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அவர்கள் வீட்டிலிருந்து ஸூம் சந்திப்பு தளம்வழி பயிற்சியில் இணைகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
"கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி யோகா பயிற்சியில் ஈடுபட்டதில் மன அழுத்தம் குறைந்துள்ளதாக உணர்கிறேன். கோபத்தைக் கட்டுப்படுத்த இப்பயிற்சி உதவுகிறது," என்று கூறினார் மார்சிலிங் சாலையில் அமை ந்துள்ள சன்லவ் மூத்தோர் நடவடிக்கை நிலையத்திற்கு செல்லும் 68 வயது திரு எஸ்.ராஜகுமார்.

