நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் இந்திராணி
பருவநிலை மாற்றம், கொள்ளைநோய் போன்ற சூழல்களை மட்டுமே எதிர்கொள்ளும் வகையில் நாடுகள் தங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போதாது. அந்த உள்கட்டமைப்பால் சமத்துவமின்மை குறைய வேண்டும், சமூக மீள்திறன் வலுப்பெற வேண்டும் என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. 'நீடித்து நிலைக்கக்கூடிய, சமமான மீள்திறனில் முதலீடு செய்தல்' என்ற தலைப்பை ஒட்டி அமைச்சர் நேற்று உலக நகர்கள் மாநாட்டில் பேசினார்.
எளிதில் பாதிப்படையக்கூடியவர்களே, ஒரு நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தைப் பெரும்பாலும் உணரும் நிலையில் உள்ளனர். அதனால் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்போது சமத்துவமின்மையைக் குறைக்கும் வண்ணம் அது அமைய வேண்டும் என்றார். மேலும், அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு உள்கட்டமைப்பு முதலீடுகள் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய முதலீடுகளே பொருளியல் மீட்சிக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதல் சக்தியாக அமையும் என்றார்.
உலகில் கொவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோர், போதிய சுகாதார வசதி இல்லாத சூழலில் வாழ்பவர்கள் என்றார் அமைச்சர். இதனாலேயே கிருமிப் பரவல் மேலும் மோசமடைந்தது என்றும் நிதி மற்றும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சராகவும் உள்ள குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், மின்னிலக்க மற்றும் இணையப் பயன்பாடு போன்றவற்றை அடிப்படை உள்கட்டமைப்பு அம்சங்கள் என்று சுட்டிய அவர், இவற்றை நகர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றார்.
"இவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பது, சமத்துவமின்மை நிலையைக் குறைப்பதற்கு மிக முக்கியம்," என்றார். அத்துடன் இதன் தொடர்பில் சிங்கப்பூர் எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றியும் அவர் பேசினார். 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 நிமிட நடை தூரத்தில் ஒரு பூங்கா அமைந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அத்துடன் நாடளவில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை மேம்படுத்த, ரயில் கட்டமைப்பை 230 கிலோமீட்டரிலிருந்து 360 கிலோமீட்டருக்கு நீட்டிப்பதையும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் மூத்த குடிமக்களிடையே மின்னிலக்கத் திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார். இதற்கிடையே நீடித்து நிலைக்கக்கூடிய, பசுமையான எதிர்காலத்தில் முதலீடு செய்வதும் முக்கியம் என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.
ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இம்மாநாடு, கொவிட்-19 சூழல் காரணத்தால் இவ்வாண்டு இணையம் வழி நடந்தது. அரசாங்கத் தலைவர்களும் தொழில்துறைகளும் ஒன்றுகூடி நகர்ப்புறச் சவால்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவர். நாளை மாநாடு முடிவுறும்.

