மின்னிலக்கப் பொருளியல் தொடர்பான இருதரப்பு உடன்பாடுகளை வரைய விரைவில் கூட்டு பணிக்குழுக்களை அமைக்க சிங்கப்பூரும் வியட்னாமும் இணக்கம் கண்டுள்ளன.
வியட்னாமுக்கு வருகை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளி
யுறவு அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணனும் வியட்னாம் வெளியுறவு அமைச்சர் புயி தான் சோனும் நேற்று முன்தினம் சந்தித்தனர்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கு வதற்கு ஏதுவாக, சுகாதாரச் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளிக்க இரு அமைச்சர்களும் பரஸ்பர முறையில் இணக்கினர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இரு நாடுகள் ரீதியிலும் ஆசியான் ரீதியிலும் ஒத்துழைப்பை மறுஉறுதிப்படுத்திக்கொண்ட இரு அமைச்சர்கள், மின்னிலக்க பொருளியல், இணையப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை மேம்பாடு, அறிவார்ந்த நகரங்கள் ஆகிய புதிய துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை விரிவு
படுத்த சம்மதித்தனர்.
"அனைத்துலக அளவிலும் வட்டார அளவிலும் மேம்பாடுகள் பற்றி விவாதித்த இரு அமைச்சர்கள், இந்த வட்டாரத்தில் ஆசியானின் மையத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
"மேலும் அதன் மூலம் ஆசியான் வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் மேம்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்," என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டாக்டர் விவியனும் திரு சோனும் 2021 முதல் 2023 வரை வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரிகளுக்கான கல்வி வருகை மற்றும் நிர்வாகக் கல்வி தொடர்பான உடன்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
அதன் மூலம் வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரிகள் சிங்கப்பூரில் நடத்தப்படும் பொது நிர்வாகம், நகர திட்டமிடுதல், போக்குவரத்து நிர்வாகம், அனைத்துலக விவகாரங்கள் ஆகியவை தொடர்பிலான நிர்வாகக் கல்வி பரிமாற்றங்களில் பங்கேற்பார்கள்.
இதற்கு முன், 2010, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த உடன்பாட்டின் புதுப்பிப்புகள் இடம்பெற்றன.
டாக்டர் விவியன், வியட்னாம் அதிபர் நுயன் ஸுவான் புச், பிரதமர் பாம் மின் சின், வியட்னாமின் ஃபாதர்லாண்ட் முன்னணியின் மத்திய செயற்குழுத் தலைவர் டோ வான் சியன் ஆகியோரைச் சந்தித்து பேசினார் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

