போதைப்பொருள் குற்றத்துக்காக பெற்றோர் இருவரும் சிறையில் இருந்ததால், அவர்களின் ஒன்பது வயது மகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சிறுமியின் தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அந்த ஆடவரோ பலமுறை சிறுமியை மானபங்கம் செய்தார். 2012க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் தற்போது 69 வயதாகும் அந்த ஆடவர், சிறுமியின் உடலைப் பிடித்துவிடும் சாக்கில் தகாத முறையில் தொட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
சிறுமியின் ஆறு சகோதரர்களும் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் ஆடவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
தற்போது 18 வயதாகும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக சிறுமியின் அண்டைவீட்டுக்காரரை விசாரணை செய்தபோது சிறுமியின் தாத்தா புரிந்த குற்றங்கள் அம்பலமாகின.
அந்த அண்டைவீட்டுக்காரருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் 16 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுவிட்டன. சிறையிலிருந்து 2014ஆம் ஆண்டில் சிறுமியின் தாயார் விடுதலையாவதற்கு முன்னதாக ஆடவர் தமது முறைகேடான செயலை நிறுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தன் செயல்களை எண்ணி ஆடவர் வருந்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் ஆடவருக்கு உண்டு என்றும் மனநலக் கழகத்தின் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
நேற்று ஆடவருக்கு ஐந்து ஆண்டுச் சிறை விதிக்கப்பட்டது.

