பொதுத் துறை மின்னிலக்கமயமாக மாறுவதைத் துரிதப்படுத்த அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் ஏறத்தாழ $3.8 பில்லியன் தொகையை தகவல், தொடர்பு தொழில்நுட்பக் குத்தகைகளுக்கு செலவிடும்.
கவ்டெக் எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு நேற்று இதனைத் தெரிவித்தது.
கடந்த மார்ச் 31ம் தேதி முடிந்த நிதி ஆண்டில் செலவிடப்பட்ட $3.5 பில்லியன் தொகையைவிட இது கிட்டத்தட்ட 10% அதிகமாகும்.
நடப்பு நிதி அண்டில் செலவு செய்யப்படும் தொகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் அடங்கும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பள்ளிப்பாடங்களை மதிப்பிடும் கட்டமைப்பு, வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் பயனாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் லைப்எஸ்ஜி செயலிக்கான மேம்பாடுகள் அவற்றில் சில.
அரசாங்கத்தின் அந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பக் குத்தகைகளில் சுமார் 83%, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று கவ்டெக் அமைப்பு கூறியது.
குறைவான நிதி மதிப்பீடு கொண்ட சிறிய நடுத்தர நிறுவனங்களும் அரசாங்கக் குத்தகைகளில் விண்ணப்பம் செய்ய உதவும் வகையில், சிறிய இணையக் கட்டமைப்புகளுக்கு கூடுதல் சேவைகளையும் திட்டங்களையும் அரசாங்கம் சேர்க்கும்.
முந்தைய ஆண்டுகளின் முதலீடுகள் ஏற்படுத்திய உத்வேகத்தையும் கொவிட்-19 கிருமிப் பரவலால் மின்னிலக்கமயத்தில் பெற்ற ஆதாயங்களையும் இவ்வாண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பச் செலவினம் பயன்படுத்திப் பெருக்கும் என்று கவ்டெக் அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
$3.8 பில்லியன் தொகையில் $500 மில்லியன், பொதுத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிக்க ஒதுக்கப்படும்.
மேம்பட்ட சேவைகளை வழங்கவும், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த முடிவுகளை எடுக்கவும் உற்பத்தித் திறனைப் பெருக்க செயல்பாடுகளை மேம் படுத்தவும் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் அரசாங்கத்துக்கு உதவும் என்று அமைப்பு கூறியது.
மேலும் $2.7 பில்லியன் தொகை, பல்வேறு துறைகளில் மின்னியல் சேவைகளை மாற்றியமைத்து, ஒருங்கிணைக்கவும் சீரமைக்கவும் பயன் படுத்தப்படும். இதன் தொடர்பில் 250 திட்டங்கள் கொண்டுவரப்படும்.
இச்சேவைகளில் 44%, குடிமக்களுக்கும் வர்த்தகங்களுக்குமான சேவைகளைத் துரிதப்படுத்தும். இணையம் வழியான கிளவுட் (cloud) கணினி முறையில் அவை உருவாக்கப்படும்.
2024 மார்ச் 31ம் தேதிக்குள் தகுதிபெறும் பொதுச் சேவைகளில் 70 விழுக்காட்டை இணையம் மூலமாக வழங்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்று கவ்டெக் அமைப்பு கூறியது.

