கொரோனா பெருந்தொற்று சூழலில் தரமான, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உள்கட்டமைப்பு சவாலான ஒன்று. அத்துடன், பருவநிலை மாற்றம், வேகமாக நகரமயமாகிவரும் சூழல் இதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
எனினும் இதில் தனியார் துறை, பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள், அரசாங்கத் துறை போன்றவற்றுடன் பங்காளித்துவ அடிப்படையில் வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
நிதி அமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, சிங்கப்பூர் நாணய ஆணையம், 'இன்ஃபிராஸ்ட்ரக்சர் ஆசியா' நிறுவனம் ஆகியவை நடத்திய ஆசிய உள்கட்டமைப்பு மாநாட்டில் அவர் பேசினார்.
கொவிட்-19 பெருந்தாற்று உலகப் பொருளியல் 4.5% வீழ்ச்சிகாண காரணமாகிவிட்டது. அனைத்து ஆசியான் நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6 % அளவு நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கின.
"செலவின அதிகரிப்பு, கட்டுமானப் பணிகளை முடுக்கிவிடுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றால் ஏற்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சி பொருளியல் மீட்சிக்கு வழிவிடும் என்று ஆசிய நாடுகளும் பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளும் அடையாளம் கண்டுள்ளன. சில நாடுகள் ஏற்கெனவே உள்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளன."
"நாடுகள் தங்கள் வளங்களை பெருந்தொற்றை எதிர்ப்பதில் செலவிட்டு வரும் வேளையில் தனியார், பொதுத் துறைகள் செய்யும் கூடுதல் முதலீடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று," என்றார் அவர்.

