பயிற்சிக் கட்டணச் சலுகை, பயிற்சி மானியம் உட்பட மேம்படுத்தப்பட்ட பயிற்சி ஆதரவு நடவடிக்கைகளை சிங்கப்பூர் நாணய ஆணையமும் வங்கியியல், நிதி நிலையமும் (ஐபிஎஃப்) நீட்டிக்கவுள்ளன.
நீட்டிக்கப்படும் ஆதரவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2022 ஜூலை 1ஆம் தேதி நிறுத்தப்படும் என்று அவ்விரு அமைப்புகளும் நேற்று ஒரு கூட்டறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளன.
ஐபிஎஃப்-தரநிலைகள் பயிற்சித் திட்டம் (ஐபிஎஃப்-எஸ்டிஎஸ்) மற்றும் நிதியியல் பயிற்சித் திட்டத்தின்கீழ் (எஃப்டிஎஸ்) வரும் பயிற்சிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நிதியியல் துறை மேம்பாட்டு நிதியின்மூலம் 90% கட்டணச் சலுகை வழங்கப்படும். அப்பயிற்சித் திட்டங்களுக்கு முறையே அதிகபட்சம் $7,000 மற்றும் $2,000 கட்டணச் சலுகை வழங்கப்படும்.
அதன்பின் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை 80 விழுக்காடாகவும் அதற்குப் பிறகு முறையே 70 விழுக்காடாகவும் 50 விழுக்காடாகவும் கட்டணச் சலுகை குறைக்கப்படும்.
40 வயதும் அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து 90% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
நிதியியல், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு பெற்ற ஊழியர்களுக்கான பயிற்சிப் படித்தொகை மானியம் 2022 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும். அத்தகைய ஊழியர்களுக்கு நிதித்துறை மேம்பாட்டு நிதியின்கீழ் இப்போது மணிக்கு 15 வெள்ளி வழங்கப்பட்டு வரும் நிலையில், அது மணிக்குப் பத்து வெள்ளியாகக் குறைக்கப்படும்.
கடந்த 2020 ஏப்ரலில் ஆதரவு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதே ஆண்டு நவம்பரில் அவை நீட்டிக்கப்பட்டபின் பயிற்சியில் பங்கேற்போர் விகிதம், ஆண்டு அடிப்படையில், 60% கூடியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 500 நிதித்துறை நிறுவனங்கள் அந்த ஆதரவைப் பெற்றுள்ளன.

