கி.ஜனார்த்தனன்
புதியதொரு திட்டத்தின்படி, கூகல், ஃபேஸ்புக், டுவிட்டர், டிக்டாக் ஆகிய நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் சிங்கப்பூர் சமய, சமூக அமைப்புகளுக்குப் பயிற்சி வழங்க இருக்கின்றன.
இம்மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் மூன்று பயிலரங்குகளில் சமய, சமய நல்லிணக்க, இன நல்லிணக்க அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் ஆதரவுடன் இன, சமய நல்லிணக்கத்திற்கான தேசிய வழிகாட்டுதல் குழு நடத்தும் 'கிரியேட் அண்ட் கனெக்ட்' மின்னிலக்க ஊடக பயிலரங்கின் ஒரு பகுதியாக இம்மூன்று பயிலரங்குகளும் நடத்தப்படவுள்ளன.
இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், சிங்கப்பூர் தேசிய தேவாலயச் சங்கம், தாவோயிசக் கூட்டமைப்பு உள்ளிட்ட சமய அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன.
கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகமானோர் இணையத்தை நாடுவதால் சமூக ஊடகத்தின் மூலம் பரப்பப்படும் பிரிவினைவாதக் கருத்துகளை எதிர்கொள்வதில் சவால்கள் இருப்பதாக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
"பிரிவினையை ஏற்படுத்தவல்ல ஆற்றல் மட்டுமின்றி, ஒன்றிணைக்கவல்ல ஆற்றலையும் சமூக ஊடகங்கள் கொண்டு உள்ளன. இணையத்தில் நல்ல முறையிலான தாக்கத்தை ஏற்படுத்த எங்களது தொழில்நுட்பப் பங்காளிகள் எங்களுடன் செயலாற்றி வருகின்றன," என்று திரு டான் கூறினார்.
இன்ஸ்டகிராம் பதிவுகள், டிக்டாக் காணொளிகள் போன்றவை மூலமாக இளையர்களுக்கு ஏற்ற வகையில் போதிப்பது எப்படி என்று இந்தப் பயிலரங்குகளில் கற்றுத் தரப்படும்.
"பயிலரங்கில் கற்றவற்றின் மூலம் இளையர்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த முயல்வோம்," என்று 'ரோசஸ் அப் பீஸ்' சமூக நல்லிணக்க அமைப்பின் நிறுவனரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது இர்ஷாத் தெரிவித்தார்.
முதல் பயிலரங்கில் பங்கேற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஊடக, தொடர்பு நிர்வாகி திரு கவிந்திரன் தர்மலிங்கம், 34, சமூக ஊடகங்களை மேலும் ஆக்ககரமாகப் பயன்படுத்துவது குறித்துக் கற்றுக்கொண்டதாகக் கூறினார். "சிறுகாணொளிகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டோம்," என்றார் அவர்.
கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை இந்து அறக்கட்டளை வாரியம் பயன்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற பயிலரங்குகள் நிர்வாக முறையை சூழலுக்கு ஏற்ப கையாளும் ஆற்றலை மேற்படுத்த உதவுகின்றன என்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த.ராஜசேகர் குறிப்பிட்டார்.

