கொவிட்-19 காரணமாக இடம்பெறும் கட்டுப்பாடுகள் உணவு, பானத் தொழில்துறையில் ஈடுபட்டு இருப்போருக்கு ஏராளமான நெருக்கடிகளைக் கொடுக்கின்றன.
அந்தத் துறை ஏற்கெனவே மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. வாடகை பிரச்சினைகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்பதிவுகள் ரத்தாயின. உணவைக் கொண்டு கொடுக்கும் விநியோக சேவைகளும் பாதிக்கப்பட்டன.
புதிதாக திறக்கப்பட்ட உணவகங்களாக இருந்தாலும் இனிமேல் சேவையைத் தொடங்க இருக்கும் உணவகங்களாக இருந்தாலும் உரிமையாளர்கள் தங்கள் காலத்தையும் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கிரேக் ரோட்டில் ‘ஃபைரங்கி சூப்பர்ஸ்டார்’ என்ற நவீன உணவகம் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. அதன் தலைமை சமையல் வல்லுநரான திரு குணசேகரன், தனக்கே உரிய புதுப்புது பாணிகளைப் பின்பற்றுகிறார்.
பசிபிக் பிளாசாவில் ஜூலை 12ஆம் தேதி ‘மிஸ்டர் ஹோல்ம்ஸ் பேக்ஹவுஸ்’ என்ற சான்பிரான்சிஸ்கோ ரக கேக் கடை திறக்கப்பட உள்ளது.
‘கேரஸ் ஹோல்டிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு விஜய் கே. பிள்ளை, 36, இதை சிங்கப்பூருக்கு கொண்டு வருகிறார்.
கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்த இடம்பெறும் திடீர் நடவடிக்கைகளும் நிச்சயமில்லாத நிலைமையுமே பெரும் சவால் என்று இவர் கூறினார்.
பல மாதங்களாகப் போட்ட திட்டங்கள் திடீரென மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆகையால் பல உத்திகளையும் மீண்டும் தீட்ட வேண்டி இருக்கிறது என்று திரு விஜய் கே. பிள்ளை தெரிவித்தார்.