உணவங்காடிக் கடை வாடகை: வாரியம் விளக்கம்
உணவு அங்காடிக்கடை வாடகைகள் போட்டித்திறன் மிக்கவையாக இருக்கின்றன. வர்த்தக ரீதியில் செயல்படும் காப்பிக்கடைகள், உணவகங்களில் உள்ள கடை வாடகைகளைவிட அவை மிகவும் குறைவாக இருக்கின்றன என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் உணவு அங்காடிக்கடை வாடகையைக் கணிசமான அளவுக்கு வாரியம் உயர்த்தி இருக்கிறது என்று இணையத்தில் விவாதிப்புகள் தலைகாட்டின. இதைத்தொடர்ந்து வாரியத்தின் அறிக்கை இடம்பெற்று உள்ளது.
அந்த விவாதிப்புகளைத் தெளிவுப்படுத்த தான் விரும்புவதாகக் கூறிய வாரியம், உணவங்காடிக் கடைகள் மூன்றாண்டு குத்தகையுடன் கூடியவை என்றும் அந்தக் காலகட்டத்தில் வாடகை மாறாது என்றும் தெரிவித்தது. தேசிய சுற்றுப்புற வாரியம் 144 உணவங்காடி நிலையங்களை நிர்வகித்து நடத்துகிறது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு குத்தகை புதுப்பிக்கப்படும் போது அப்போதைய சந்தை விகிதாச்சார அளவை அடிப்படையாகக் கொண்டு குத்தகை நிர்ணயிக்கப்படும்.
அந்தச் சந்தை விகிதாச்சாரங்களை சுதந்திரமான நிபுணத்துவ மதிப்பீட்டாளர்கள் மதிப்பிடுவார்கள் என்றும் வாரியம் குறிப்பிட்டது.
குடும்ப வாழ்வு மேம்பட உதவிய மெய்நிகர் குடும்ப தினம்
சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலில் குடும்ப உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் நேற்று மெய்நிகர் குடும்ப தினம் கடைப்பிடிக்கப்பட்டது. திருந்தி வாழும் குற்றவாளி களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதும் அதன் நோக்கம். அதில் 100 குடும்பங்கள் பங்கெடுத்துக் கொண்டன.
தொழில்துறை மற்றும் சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் அறப்பணி அமைப்பான 'இஸ்கோஸ் ரீஜென் ஃபண்ட்' என்ற நிறுவனம் ஏற்பாட்டில் குடும்ப தினம் திருந்தி வாழும் குற்றவாளிகளுக்காகவும் அவர்களின் குடும்பத்தாருக்காக வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கலந்துகொண்டு உரையாற்றினார். கொவிட்-19 காரணமாக பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்தச் சூழலில் குடும்பத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது என்றார் அமைச்சர்.
இப்போதைய காலகட்டம் நம்மில் சிலருக்குச் சோதனை கட்டமாக இருக்கிறது. சவால்மிக்கதாக இருக்கிறது. உளைச்சல் தருவதாக உள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்க, வீட்டிலிருந்து கல்வி கற்க வேண்டி இருக்கிறது.
இந்த நிலை இருந்தாலும் இவை காரணமாக நமக்கு புதிய வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கவலைகள், சங்கடங்கள் இருந்தாலும் நாம் ஒருவர் மற்றொருவரை பொக்கிஷமாகக் கருதி நம் அன்புக்குரியவர்களுடன் ஐக்கியமாக இருந்து குடும்ப உறவைப் பலப்படுத்த முடியும் என்று திருவாட்டி சுன் மேலும் தெரிவித்தார். அந்த இரண்டரை மணி நேர நிகழ்ச்சியில் பல குடும்பங்கள் பல்வேறு நடவடிக்கைகளிலும் புதிர் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றன. விழாவில் கலந்துகொண்ட பலரும் மகிழ்ச்சி, மனநிறைவை வெளிப்படுத்தினர்.

