இனம் பற்றியும் இனவாதம் பற்றியும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அண்மையில் ஆற்றிய உரை சரியான அறிகுறியைக் காட்டுவதாகவும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள மக்கள் ஒருவருக்கு ஒருவர் கற்றுத் தந்து உதவ வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பு அரசியலுக்கு அற்பாட்டுச் செல்லும் முக்கியமான ஒன்று எனவும் எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
ஆனால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் உள்ள இனவாரியாக ஒதுக்கீடு செய்யும் இன ஒருங்கிணைப்புப் கொள்கை, நாடாளுமன்றக் குழுத்தொகுதி போன்ற கொள்கைகள் மறுஆய்வு செய்யக்கூடியவை என்று அவர் கூறினார்.
இனம் பற்றி கொள்கை ஆய்வுக் கழகமும் எஸ். ராஜரத்தினம் ஆய்வுக் கழகமும் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் திரு வோங் ஆற்றிய உரையைப் பற்றி திரு பிரித்தம் அவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த சனிக்கிழமை அதுபற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட திரு பிரித்தம், மக்கள் செயல் கட்சியின் சில நீண்டநாள் கொள்கைகளில் எல்லாருக்கும் இணக்கம் இல்லை என்று திரு வோங் தமது உரையில் ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிடத்தக்கது என்று திரு பிரித்தம் வருணித்தார்.
இன ஒருங்கிணைப்புக் கொள்கை பற்றி பாட்டாளி கட்சிக்கு நெருடல் இருப்பதாகவும் அவர் சொன்னார். அக்கொள்கை பற்றி தங்களிடம் கருத்துரைத்த சிறுபான்மை இனத்தவர்கள் விலையைக் குறைத்து வீட்டை விற்கும் நிலையில் தாங்கள் உள்ளதாகக் கூறினர் என்றார் அவர்.
அக்கொள்கையால் சிறுபான்மை இனத்தவர் நேரடியான, உண்மையான நிதிச் சுமையை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசிய பள்ளிகள், தேசிய சேவை உள்ளிட்ட கொள்கைகளில் இனம் வகிக்கும் பங்கு பற்றியும் திரு பிரித்தம் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றக் குழுத் தொகுதிக் கொள்கை பற்றி திரு வோங் அளித்த விளக்கம் பற்றிக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரர்களில் பலரும் இன்று இனரீதியாக வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்புவது பொருத்தமாக இருக்கும் என்றார்.

