சென்ற வாரயிறுதி அதிகாலையில் சாங்கி கடற்கரை, பாசிர் ரிஸ் பூங்கா போன்ற இடங்களில் கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில் அங்கு ஒதுங்கியிருந்த கடல் உயிரினங்களைக் காண பொதுமக்கள் பலர் கூடினர்.
அப்போது கடல் உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் அவற்றைப் பார்த்து மகிழ்வதற்கு அங்கு சென்ற பொதுமக்களுக்கு தேசிய பூங்காக்கள் கழகத்தின் ஊழியர்களும் தொண்டூழியர்களும் வழிகாட்டினர்.
அரிய வகை உயிரினமான கேக் கடல் விண்மீனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்துக்கு வழிகாட்டினார் தொண்டுழியர்களில் ஒருவரான 44 வயது திருவாட்டி டோரீன் ஃபூ. உயிரினங்களைப் பார்த்தால் போதும், தொடவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
கடந்த ஜூன் 13ஆம் தேதி கடல் மட்டம் குறைந்திருந்தபோது, இதே போல பலரும் கடல் உயிரினங்களைக் காண சாங்கி கடற் கரையில் குடும்பங்களாகக் கூடியதைக் காட்டும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவின.
ஆனால் அவர்கள், வாளிகளையும் குறடுகளையும் மண்வாரிகளையும் கொண்டு கடல் உயிரினங்களைத் தொட்டதும் எடுத்துச் சென்றதும் காணப்பட்டது.
ஆனால் நேற்றைய நிலை மேம்பட்டு இருந்தது.
நேற்று சாங்கி கடற்கரைக்குச் சென்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கிருமிப் பரவல் சூழலில் பொதுமக்கள் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று வருவது தெரியும் என்றார். ஆனால் சில நடத்தைகளால் சிங்கப்பூரின் கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றார் அவர். அதனால் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.