சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதியாகி உள்ளது. சுகாதார அமைச்சு நேற்று அதனைத் தெரிவித்தது.
அவர்களில் 12 பேர் சமூகத்தில் இருப்பவர்கள். இரண்டு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சமூகத் தொற்றுகளில் ஒருவருக்கு, தொற்று ஏற்பட்டுள்ள வேறு எவருடனும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மருத்துவப் பிரச்சினைகளின் காரணமாக 84 வயது மாது உயிர் இழந்தார் என்று சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை இரவு தெரிவித்தது.
புக்கிட் மேரா வியூ புளோக்குகள் 115, 116க்கு சென்றவர்களுக்கு சுகாதார அமைச்சு மேற்கொண்ட கண்காணிப்புச் சோதனைகளில் அவருக்கு கடந்த 15ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியானது.
அவருக்கு தடுப்பூசி செலுத்தப் படவில்லை. அத்துடன், புற்றுநோய், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் அவருக்கு இருந்தன.

