இந்து இளங்கோவன்
ஒரு முறை சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடக்கும் சிங்கப்பூரில் உள்ள ஒரு பகுதிக்கு சென்றிருந்தபோது அங்கு நிகழ்ந்த சூதாட்டம், விபசாரம் அவற்றை களைய காவல் அதிகாரிகள் மேற்கொள்ளும் கண்காணிப்பு போன்றவற்றை பார்த்து வியப்படைந்தார் 33 வயது குறும்பட இயக்குநர் செ. விக்னேஸ்வரன்.
அவர் பார்த்து வியந்தவற்றை மையமாகக்கொண்டு ‘டார்க் லைட்’ (Dark Light) எனும் ஒரு குறும் படமாகத் தயாரித்துள்ளார்.
இந்தக் குறும்படம், 7வது தேசிய இளையர் திரைப்பட விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட 56 குறும்படங்களில் ஒன்று.
இந்தியாவில் உள்ள தமது குடும்பத்தைக் காப்பாற்ற சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராகப் பணிபுரியும் மாரி என்னும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், இரவு நேரத்தில் விபசாரம் நடக்கும் ஒரு பகுதிக்குச் செல்கிறார்.
அங்கு ஒரு குழுவாக சிலர் பகடைக்காயை உருட்டி சூதாட்டம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். இது அவரின் கவனத்தை ஈர்க்கிறது. விளையாட்டில் தானும் பங்கேற்கிறார்.
சில சுற்றுகளில் வெற்றிபெற்றபின் மாரி அங்கிருந்து விடைபெற ஆயத்தமாகிறார்.
ஆனால் அவரின் விருப்பத்தை நிராகரித்து அவரிடம் இருந்த பணம் அனைத்தையும் அபகரிக்கிறது ஒரு குண்டர் கும்பல்.
அவர்களை எதிர்த்துப் போராடும் மாரியை குண்டர் கும்பல் மோசமாகத் தாக்கி காயப்படுத்திவிட்டு அவரிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு செல்கிறது.
இந்தியாவில் இருக்கும் தமது குடும்பத்திற்கு அனுப்ப கையில் பணம் இல்லாததை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகும் மாரி, நிலைமையைச் சமாளிக்க எதிர்பாராத ஒன்றைச் செய்கிறார்.
இதுதான் ‘டார்க் லைட்’ குறும்படத்தின் சுவாரசியமான கதை.
விறுவிறுப்பான காட்சிகள், கதையோட்டத்துக்கு ஏற்ற ஒளிப் பதிவு, யதார்த்தமான நடிப்பு என ‘டார்க் லைட்’ குறும்படம் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கிறது.
படத்தில் மாரியாக நடித்தவர் தொலைக்காட்சி நாடக பிரபலம் கொஸ்டெலோவா ஸ்பான்சர்.
இந்தியநாட்டு ஊழியர் கதாபாத்திரத்தில் நடிக்க பல வகையில் தம்மை தயார்படுத்திக்கொண்டதாக கூறினார் ஸ்பான்சர்.
வெளிநாட்டு ஊழியர்களின் நடை, உடை, பாவனைகளைக் கவனித்து அவர்கள் எவ்வாறு பேசுவார்கள், நடந்துகொள்வார்கள், அவர்கள் உடல் அசைவுகள் போன்றவற்றை கற்றுக்கொண்டு மாரி காதாபாத்திரத்தை தாம் உருவாக்கியதாக ஸ்பான்சர் தெரிவித்தார்.
‘SCAPE’ ஏற்பாட்டில் நடக்கும் தேசிய இளையர் திரைப்பட விருது போட்டிக்கு இந்த ஆண்டு மொத்தம் 330 குறும்படங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன.
அதில் சிறந்த 56 குறும்படங்கள் விருதுகளுக்கு நியமனம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு பெரும்பாலான குறும்படங்கள், மனநலம், சுய தேடல், கிருமித்தொற்று விளைவித்திருக்கும் இந்த கடினமான காலகட்டத்தில் சவால்களை எதிர்த்து மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் ஆகிய கருப்பொருள்களை கொண்டிருந்ததாகத் தெரிவித்தது ஏற்பாட்டுக்குழு.
‘டார்க் லைட்’ படப்பிடிப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தபின், கிருமித்தொற்று ஏற்படுத்திய சவால்களால் படப்பிடிப்பை இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டியிருந்தது.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் தொடங்குவதற்கு சில நாட் களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறை வடைந்துள்ளது. அதன் பிறகு படத்தின் தொகுப்பாக்கத்தை வீட்டிலிருந்தபடியே செய்து முடித்திருக்கின்றது படக்குழு.
குறும்படத்தின் இயக்குநரும் நிர்வாகத் தயாரிப்பாளருமான செ விக்னேஸ்வரன், இந்தக் குறும்படம் ஏறக்குறைய $15,000 செலவில் உருவானதாகக் கூறினார்.
‘கிராப்’ வாடகை கார் ஓட்டி அதிலிருந்து கிடைத்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து படத் தயாரிப்பிற்கு பயன்படுத்தியுள்ளார் இந்த இளம் திரைப்பட ஆர்வலர்.
இவரைப் போலவே துடிப்பான பல இளம் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தொடர்ந்து தங்களது படைப்பு களின் வழி ஆற்றலைப் வெளிப் படுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் குறும்படங்களைத் தயாரிக்கும் இளையர்களின் எண்ணிக்கையும் அவர்கள் தயாரிக்கும் படங்களின் தரமும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதே நேரத்தில், தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு சிங்கப்பூர் மக்களிடமிருந்து போதுமான ஆதரவும் வரவேற்பும் கிடைப்பது இல்லை என்பது சில இளம் படத் தயாரிப்பாளர்களின் வருத்தமாக உள்ளது.
தங்களது படங்களை வெளியிட சிறந்த ஊடகத் தளங்கள் கிடைப்பதும் குறும்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய சவால் என்றும் ‘டார்க் லைட்’ படக்குழுவினர் குறிப்பிட்டனர்.