சென்ற ஆண்டு கொவிட்-19 பரவலின்போது சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தபின் அதிகாரிகளிடம் பொய்த் தகவல் அளித்த தென்கொரியர் ஒருவர்க்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான கோ கியூங் ஹோ, 46, கடந்த ஆண்டு தென்கொரியாவில் இருந்து வந்தபின் நவம்பர் 25 முதல் டிசம்பர் 9 வரை கட்டாய இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
ஆனால், பிரத்தியேக இடங்களில் அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். வீட்டில் தனியாக அல்லது தம்முடன் பயணம் செய்த குடும்ப உறுப்பினர்களுடன் கட்டாயத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதாக அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ரிவர் வேலி சாலைக்கு அருகே ஷங்ஹாய் சாலையில் உள்ள சார்ல்ஸ்டன் கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு நவம்பர் 26ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் சென்றனர். அவருடன் மனைவியும் இரு பிள்ளைகளும் அவ்வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால் அம்மூவரும் அவரைப் போன்றே பயணம் செய்திருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

