மூன்று ஆண் நண்பர்களுடன் டாக்சி ஓட்டுநர் ஒருவரை, 16 வயது பெண் தாக்கியதுடன் அவரிடமிருந்த பணத்தையும் பறித்தார்.
அத்துடன் அந்த நண்பர்களில் இருவருடன் காப்பிக் கடை ஒன்றுக்குள் புகுந்து $600 மதிப்புடைய சிகரெட்டுகளையும் திருடினார். 18 வயதுக்குக் கீழ் உள்ள நிலையில் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மூன்று ஆண் நண்பர்களைச் சென்ற ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதியன்று சந்தித்தார் அந்தப் பெண்.
டாக்சியில் சவாரி செய்த பிறகு கட்டணம் செலுத்தாமல் ஓடிவிடலாம் என்று நண்பர்கள் திட்டமிட்டனர். ஓட்டுநர் துரத்தினால் அவரைத் தாக்கலாம் என்றும் முடிவெடுத்தனர்.
முதல் முறை தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தியபோது ஓட்டுநர் அவர்களைத் துரத்தவில்லை. அதனால் இரண்டாவது ஓட்டுநரான 63 வயது ஆடவரை வேண்டுமென்றே வம்பிழுத்து அவரைத் தாக்கியதுடன் அவரிடமிருந்து $256ஐ அபகரித்தனர். முகக்காயங்களுடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஓட்டுநருக்கு மறதி நோயும் ஏற்பட்டிருந்தது.
மூன்று நாட்கள் கழித்து சுவா சூ காங் காப்பிக் கடை ஒன்றினுள் அத்துமீறிப் புகுந்து சிகரெட்டுகளைக் களவாடினர்.
திருட்டு தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள், தனக்கு ஒருவர் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக போலிஸ் அதிகாரியிடம் பொய்த் தகவல் அளித்தல் ஆகியவை தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்படும்.
நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தப் பெண், மீண்டும் இம்மாதம் 7ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

