கடைத்தொகுதிகள், பேரங்காடிகள் போன்ற இடங்களில் முந்நூற்றுக்கும் அதிகமான மின்கழிவு சேகரிப்புத் தொட்டிகளில் இன்று முதல் பயனீட்டாளர்கள் தங்களது மின், மின்னணுக் கழிவுகளைப் போட்டுச் செல்லலாம்.
பொருள்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய மின்கழிவு நிர்வாகத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.
ஆண்டுதோறும் ஏறக்குறைய 20,000 டன் மின்கழிவுகளைச் சேகரிக்க வேண்டும் என்பதே இலக்கு. குளிர்பதனப் பெட்டிகள் போன்ற பெரிய அளவிலான மின்கருவிகள், மடிக்கணினி போன்ற தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், சிறிய அளவிலான மின்விளக்கு, மின்கலம் போன்றவை அதிலடங்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், மில்லெனியா வாக்கில் அமைந்துள்ள ஹார்வி நார்மன் அறைகலன், மின்னணுக் கருவி விற்பனைக் கடையில் நேற்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஏறத்தாழ 60,000 டன் மின்கழிவுகள் உருவாக்கப்படுவதாக டாக்டர் கோர் குறிப்பிட்டார். இது, ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் கிட்டத்தட்ட 70 கைபேசிகளை வீசியெறிவதற்குச் சமம்.
மின்னணுக் கருவிகள் பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்த அளவு மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"விலைமதிப்புமிக்க பொருள்களை மீட்கவும் அபாயகரமான பொருள்கள் நம் உடல்நலத்தையும் சுற்றுசூழலையும் பாதிப்பதைத் தடுக்கவும் மின்கழிவுகளை முறையாகக் கையாள வேண்டும். சிங்கப்பூரைக் கழிவில்லா நாடாக மாற்ற மின்கழிவுகளைக் குறைப்பதும் மறுசுழற்சி செய்வதும் மிக முக்கியம்," என்றார் டாக்டர் கோர்.
ஜூன் 4ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோட்டத் திட்டத்தின்கீழ், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமைவரை அச்சுப்பொறிகள், கைபேசிகள், மின்விளக்குகள், கணினிகள் உட்பட 1,000 கிலோவுக்கும் அதிகமான மின்கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
அனைத்துலக கழிவு நிர்வாக நிறுவனமான அல்பா குழுமத்தின் 'அல்பா மின்கழிவு விவேக மறுசுழற்சி' நிறுவனம், 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிவரை இந்த மின்கழிவுச் சேகரிப்பு சேவைகளை மேற்கொள்ளும்.
பயனீட்டாளர்கள் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்யும்போது அல்பா நிறுவனத்தின் 'ஸ்டெப் அப்' கைபேசிச் செயலியின் மூலம் புள்ளிகளை ஈட்டலாம். அதனைப் பயன்படுத்தி, வாடகை வாகன சேவை, உணவு விநியோகம், சைக்கிள் பகிர்வு, அழகுப் பொருள்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை அவர்கள் பெற முடியும்.
அந்தச் செயலியைக் கொண்டு, சேகரிப்புப் பகுதிகளில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி, தாங்கள் மறுசுழற்சி செய்யும் மின்கழிவைப் படமாக எடுத்து, மதிப்புப் புள்ளிகளை ஈட்டலாம்.

