கிளமெண்டியில் உள்ள பொது வீடமைப்புப் பேட்டைகளில் புகைபிடிப்பதற்கான இரு வேறு மேம்படுத்தப்பட்ட பிரத்தியேக இடங்களை ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியைச் சேர்ந்த புக்கிட் தீமா பிரிவு சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.
தேவைக்கேற்ப கட்டி விற்கப்பட்ட (பிடிஓ) கிளமெண்டி ரிட்ஜஸ் பேட்டையிலும் வடிவமைத்து, கட்டி, விற்பனை செய்யும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள டிரிவேலிஸ் பேட்டையிலும் புகைபிடிப்பதற்கான இந்தப் பிரத்தியேக இடங்கள் அமைந்துள்ளன.
இரு இடங்களிலும் புகைபிடிப்பவர்களுக்காக குளிர்ந்த வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோட்டத் திட்டம் ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று புக்கிட் தீமா தொகுதி அலுவலகத்தைச் சேர்ந்த இயக்குநர் ஏஞ்சலா வோங், 38, தெரிவித்தார்.
புகைபிடிப்பதற்கான இத்தகைய பிரத்தியேக இடங்கள் தொழிற்சாலை, வணிக வளாகங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குடியிருப்புப் பகுதிகளில் முதன்முறையாக இவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று முன்தினம் இந்த இடங்களைப் பார்வையிட்டார். கொவிட்-19 காரணமாக மக்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் தற்போதைய சூழலில், குடியிருப்புகளில் பலர் புகைபிடிப்பதால் சிகரெட் வாடை வீசுவதாக புக்கிட் தீமா குடியிருப்பாளர்களிடமிருந்து கூடுதலான புகார்கள் கிடைத்திருப்பதாக திருமதி சிம் ஆன் தெரிவித்தார்.
புகைபிடிப்பவர்களின் சௌகரியத்திற்காக இந்தப் பிரத்தியேக இடங்கள் வீடுகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன. பகல்நேரத்தில் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதற்காக குளிர்ந்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்க இந்த இடங்களில் புகைபிடிப்பதற்காக எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோட்டத் திட்டத்தை அப்பகுதி குடியிருப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

