ஆர்த்தி சிவராஜன்
கிருமிப் பரவல் நம்மைச் சூழ்ந்துள்ள காலகட்டத்தில் பலரும் பலவிதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மன அழுத்தத்தை வெவ்வேறு நபர்களும் வெவ்வேறு வழிகளில் எதிர்ெகாள்கின்றனர். சிலருக்குக் கலை கைகொடுத்துள்ளது.
அதற்கு வழிவகுக்க, 'ஒரே ஆள்' என்ற தமிழ் தனியுரை (monologue) எழுத்துப் பயிலரங்கை சிங்கப்பூர் இந்திய தியேட்டர் & ஃபிலிம் எக்ஸ்ப்ளோரர்கள் (சிட்ஃபி) கடந்த மே 9ஆம் தேதி முதல் ஜூன் 27 வரை நடத்தியது. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவளித்த இந்தப் பயிலரங்கிற்கு இயக்குநரும் ஊடக கல்வியாளருமான திரு சலீம் ஹாதி, 39, அமைப்பாளராக இருந்தார்.
பயிலரங்கின் கருப்பொருள் 'போராட்டம்'. போராட்டம் என்றால் உடல் ரீதியான சண்டை அல்ல. மக்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகை மனப் போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். இவற்றை எழுத்து என்ற கருவியின் மூலம் கரைக்க முற்பட்டது பயிலரங்கு.
பயிலரங்கில் கலந்துகொண்ட 12 பங்கேற்பாளர்களுக்கு ஐந்து நிமிடம் நீடிக்கும் தனியுரையை எழுத கற்றுத்தரப்பட்டது.
இணையம் வழி நடைபெற்ற ஏழு கலந்து ரையாடல்களுக்குப் பின்னர் ஜூன் 27 அன்று நடந்த இறுதி நிகழ்வில் பங்கேற்பாளர்கள் நேரடியாகச் சந்தித்து தங்களின் தனியுரைகளைப் படைத்தனர்.
ஈழத் தமிழர்களின் மனப் போராட்டங்
களைப் பற்றி தன் தனியுரையில் எழுதிய அரசாங்க ஊழியரான திரு ரெங்கநாதன் கோபாலகிருஷ்ணன், 39, "சமூகப் பிரச்சினைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதனால்தான் என் தனிப்பட்ட பிரச்சினைகளைவிட சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுத முடிவு செய்தேன்," என்றார்.
"அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஉளைச்சல் பாதிப்பின் (PTSD) தாக்கம் நெடுநாள் இருக்கும். போர்க்காயங்கள்கூட மறைந்து விடும், ஆனால் மனக் காயத்தை மறப்பது மிகக் கடினம். அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நபரை அடிப்படையாகக் கொண்டு என் கதையை எழுதினேன்," என தமது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை இரண்டில் படிக்கும் செ. அ. தாராஸ்ரீ, 13, "நிதர்சனம்" என்ற கற்பனைக் கதையை எழுதினார். மனதிற்கும் புத்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அவர் அதில் எடுத்துரைத்தார்.
"ஒரு நல்ல படைப்பின் பின்னணி என்னவென்றும், ஒரு நல்ல கதையை எழுத எதிர்நோக்கவேண்டிய சவால்கள் பற்றியும் நான் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார் தாராஸ்ரீ.
வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 'சோலோ/ஒரே ஆள்' என்ற தனியுரை நிகழ்ச்சியை இரு மொழிகளில் நடத்தத் திட்டமிடுகிறது சிட்ஃபி அமைப்பு. இருமொழிகளில் புலமை பெற்ற கலைஞர்கள் நடத்தும் அதிகமான நேரடிப் பயிற்சிகளை அது கொண்டிருக்கும்.
கடந்த பயிலரங்கில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் திறன்களைச் செம்மைப்படுத்த இது வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஏற்பாட்டாளர் திரு சலீம் ஹாதி.