உயிர்வாயுமானிகளின் விநியோகம் தொடங்கிய முதல் நாளான நேற்று (ஜூலை 5) 167,000க்கும் மேற்பட்ட கருவிகளை மக்கள் பெற்றுச் சென்றதாக தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூர்வாசிகளுக்கு உயிர்வாயுமானி இலவசமாக வழங்கும் நடவடிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீடிக்கும். ஃபேர்பிரைஸ். ஷெங் சியோங், ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ், வாட்சன்ஸ், யூனிட்டி, கார்டியன் போன்றவற்றின் 300க்கும் மேற்பட்ட கடைகளில் இவற்றை குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
வீடுகளுக்கு வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தைக் காட்டி இதனைப் பெறமுடியும். ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் உயிர்வாயுமானி வழங்கப்படுகிறது.
சரிவரக் கவனிக்காமல் துண்டுப் பிரசுரத்தை வீசிவிட்ட குடியிருப்பாளர்களுக்கு புதிய துண்டுப் பிரசுரம் வழங்க இயலாது என தெமாசெக் அறநிறுவனம் மீண்டும் தெரிவித்துள்ளது.

