கடந்த ஆண்டில் கிருமித் தொற்று முறியடிப்பு மற்றும் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாட்டு விதிமுறைகளின் காரணமாக திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தன. அத்துடன் மணவிலக்கு செய்துகொள்ளவிருந்த தம்பதியரின் திட்டங்களும் நின்று போயின.
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஆக மோசமான சரிவைக் கண்டுள்ளது.
இந்த விவரங்களை சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை நேற்று வெளியிட்டது.
கடந்த ஆண்டில் 22,651 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.9 விழுக்காடு குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் 25,434 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. 2006ஆம் ஆண்டுக்குப் பின் இதுவே ஆக மோசமான சரிவு என்று தெரியவந்துள்ளது.
திருமணம் செய்துகொண்டவர்களில் 78.5 விழுக்காட்டினர் முதன்முதலாக திருமணம் செய்துகொண்டவர்கள். கடந்த ஆண்டு 6,959 மணவிலக்குகள் நடந்துள்ளன. இந்த விகிதம் அதற்கு முந்தையை ஆண்டைவிட 8.7 விழுக்காடு குறைவு.
ஆயிரம் தம்பதியரில் மணமுறிவு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 6.3 விழுக்காட்டினர் ஆண்களும் 6.1 விழுக்காடு பெண்களும் ஆவர். இந்த எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 7.5 விழுக்காடாகவும் பெண்களுக்கு 7.2 விழுக்காடாகவும் இருந்தது.
கொவிட்-19 தொற்று திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் மணமுறிவு செய்துகொள்பவர்களின் மனப்போக்கையும் மாற்றியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட பாதுகாப்பு இடைவெளிக்கட்டுப்பாடு மற்றும் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அடுத்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தோர் தங்கள் திருமண வரவேற்பு மற்றும் பதிவுத் திருமண நிகழ்வுகளையும் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.
அதேபோல் 2020ல் திட்டமிடப்பட்டிருந்த சட்டபூர்வ பதிவுத்திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பின் மெய்நிகர் நேரலை வழியாக பதிவுத் திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அப்போது ஏராளமான தம்பதியர் தங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அதன்படி தம்பதியர் திருமண உறுதிமொழியை எடுத்துக்கொள்ள, சாட்சிகள், தம்பதியினர், திருமணப் பதிவாளர் அவரவர் வீட்டிலிருந்தவாறு திருமணச் சான்றிதழில் கையெழுத்திட்டு அதனை அவரவர் கைத்தொலைபேசி புகைப்படக்கருவி வழி காண்பித்தனர்.
கலப்பினத் திருமணங்கள் 2019ல் 19.7 விழுக்காடாக இருந்து. அது கடந்த ஆண்டில் 18.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.