கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்துப் போராட அதிகமாகத் தேவைப்படும் மருத்துவப் பொருட்கள், உயிர்வாயு உருளைகள், சுவாசக் கருவிகள், கையுறைகள், பாதுகாப்பு மேலாடைகள் போன்ற மருத்துவச் சாதனங்கள் அடங்கிய உதவிப் பொருட்களை இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் வழங்கி உதவியுள்ளது.
பாய லேபார் ஆகாயப் படைத் தளத்தில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் இரண்டு C-130 ரக விமானங்கள் நிறைய அந்தப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் நேற்று ஏற்றப்பட்டன.
ஜகார்த்தாவுக்குப் புறப்படவிருந்த அந்த இரு விமானங்களையும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ ப்ராதோமோவும் நேற்று பார்வையிட்டனர்.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை மறு உறுதிப்படுத்திய டாக்டர் விவியன், கொள்ளைநோயை எதிர்த்துப் போரிடும் இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து உதவும் என்றார்.
"கொள்ளைநோயை நாம் எதிர்த்துப் போரிடும் சமயத்தில் சமூகப் பராமரிப்பு வசதிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நமக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் அறைகலன்களை இந்தோனீசியா கொடுத்து உதவியது. இப்போது அவர்களின் தேவைக்கு நாம் பிரதி உபகாரமாக ஆதரவு வழங்குகிறோம்," என்று மருத்துவப் பொருட்களை இந்தோனீசியத் தூதரிடம் ஒப்படைக்கும் சடங்கில் பேசியபோது அமைச்சர் விவியன் இவ்வாறு தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலத்தில் இந்தோனீசியாவுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களைச் சேகரித்து நாம் கொடுத்து உதவியது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை சிறந்த முறையில் வெளிப்படுத்துகிறது என்றும் டாக்டர் விவியன் கூறினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர், பரிசோதனைக் கருவிகள், சாதனங்கள் போன்ற மருத்துவப் பொருட்களை இந்தோனீசியாவுக்கு அனுப்பியது.