வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்புவது போலிருக்கும் குறுந்தகவல்களைக் கொண்டு நடத்தப்படும் புதிய வகை தகவல் திருட்டு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஜனவரி, மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய தகவல் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக 374 புகார்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பாதிக்கப்பட்டோர் மொத்தமாகச் சுமார் 1.07 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.
தனது வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் செலுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சம்பந்தப்பட்டவருக்குக் குறுந்தகவல் வரும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அதே குறுந்தகவலில் உள்ள ஓர் இணைய முகவரிக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்படுவார்.
அந்த முகவரி, வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் போலிருக்கும் ஒரு பக்கத்திற்கு வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும். அந்த இணையத்தளம், தங்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள், ஒரு முறை பயன்படுத்தும் மறைச்சொல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளுமாறு வாடிக்கையாளரைக் கேட்டுக்கொள்ளும்.
வங்கி ஏற்கெனவே அதிகாரபூர்வமாகக் குறுந்தகவல்களை அனுப்பிய அதே கணக்கிலிருந்தே போலியானவையும் அனுப்பப்பட்டதாக வாடிக்கையாளரின் கைபேசி காட்டக்கூடும் எனக் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்ட பிறகு தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக வாடிக்கையாளருக்குக் குறுந்தகவல்கள் வரும். அப்போதுதான் தாங்கள் தகவல் திருட்டு மோசடிக்கு ஆளானது அவருக்குத் தெரியவரும்.
கேட்காமல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் இடம்பெறும் இணையத்தள முகவரிகளுக்குச் செல்லவோ தொலைபேசி எண்களை அழைக்கவோ வேண்டாம் எனக் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கின்றனர். மேலும், அத்தகைய குறுந்தகவல்களில் இடம்பெறும் தகவல்கள் சரியானவைதானா என்பதை அதிகாரபூர்வ இணையத்தளங்கள் போன்றவற்றுடன் சரிபார்க்கவேண்டும்.
தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தும் மறைச்சொல் போன்றவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
வங்கி அதிகாரிகளோ அரசாங்க அதிகாரிகளோ அத்தகைய தகவல்களைத் தொலைபேசிவழி கேட்கமாட்டார்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது.
அதோடு, அனுமதியின்றி கணக்கிலிருந்து வேறொருவர் பணத்தை எடுத்ததாகவோ கட்டணம் செலுத்தியதாகவோ தெரியவந்தால் வங்கியிடம் தெரியப்படுத்தவேண்டும், சம்பந்தப்பட்ட வங்கியின் கடன் அல்லது பற்று அட்டையைச் செயலிழக்கச் செய்யவேண்டும் எனக் காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.