ஏபெக் தலைவர்களுக்காக நடத்தப்படும் மெய்நிகர் ஓய்வுத்தள சந்திப்பில் பிரதமர் லீ சியன் லூங்கும் கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
21 ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உறுப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் ஏபெக் தலைவர்கள் அதிகாரபூர்வ சந்திப்பை நடத்த இருக்கின்றனர். அதற்கு முன்பு ஒரு கலந்துரையாடலில் அவர்கள் ஈடுபடுவது இதுவே முதல்முறை.
கொவிட்-19 நெருக்கடிநிலையின் தாக்கத்தைப் பற்றி பேச ஏபெக் தலைவர்களிடையே நிலவிவரும் விருப்பத்தை இது பிரதிபலிப்பதாக நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தெரிவித்தார்.
"இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கொவிட்-19 நெருக்கடி நிலையால் ஏபெக் நாடுகளின் பொருளியல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
"81 மில்லியன் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஏபெக் நாடுகளின் பொருளியல் மீண்டுவர கூட்டு முயற்சி அவசியம்," என்று திருவாட்டி ஆர்டன் தெரிவித்தார்.
பொருளியல் மீட்சியை சாத்தியமாக்கவும் நீண்டகால வளர்ச்சியை நிலைபெற செய்யவும் தேவையான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைக்கு மெய்நிகர் சந்திப்பின்போது அவர் அழைப்பு விடுக்க இருக்கிறார்.
சந்திப்புக்குப் பிறகு மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடத்தப்படும். சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் எடுக்கப்பட்ட முடிவுகளும் அதில் பகிர்ந்துகொள்ளப்படும்.
ஏபெக் நாடுகளில் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நோயின் காரணமாக ஏபெக் நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

