திடீர் வெள்ள அபாயம்; பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை

1 mins read
5dfa6169-7984-4d71-8104-ba5aa96dd092
கனமழை காரணமாக சிங்கப்பூரில் உள்ள பல வட்டாரங்களில் திடீரென வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நேற்று சிங்கப்பூரில் கனமழை பெய்ததால் பல்வேறு வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்தது.

கனமழை காரணமாக சாக்கடைகளும் கால்வாய்களும் நிரம்பி வழியும் அளவில் நீர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.13 மணி அளவில் அப்பர் பாய லேபார் சாலையிலும் இயோ சூ காங் சாலையிலும் சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் அளவு 90 விழுக்காட்டை எட்டியதாக கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

அந்த வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று கூறிய கழகம், அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அங்கு செல்வதைத் தவிர்க்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. நேற்று மாலை 6.50 மணி அளவில் ஜாலான் பூன் லேயிலும் புக்கிட் தீமா சாலையிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.