கொவிட்-19 விதிமுறைகளை இரண்டு முறை மீறிய வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டபோது ஒரு முறையும் அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருந்த தங்கும்விடுதியை விட்டு ஒருமுறையும் பாலச்சந்திரன் பார்த்திபன் விதிமுறைகளை மீறி வெளியேறினார்.
மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, சாங்கி விமான நிலைத்துக்குச் சென்று இந்தியா திரும்ப அவர் டிக்கெட் வாங்க முயன்றார்.
தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை பாலச்சந்திரன் நேற்று ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி உடல்நலம் சரியில்லை என்று பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். தமது தங்குவிடுதியில் சிலருக்கு கிருமி தொற்றியிருந்ததால் தமக்கும் தொற்று இருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகப்பட்டார்.
ஆம்புலன்சில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு கிருமிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்க பிற்பகலில் அவர் மருத்துவமனையின் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டார்.
பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என்று தாதிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரிடம் கூறியபோதும் அவர் அங்கிருந்து வெளியேறி, தியோங் பாரு வரை நடந்து பொதுப் பேருந்தில் ஏறினார். இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்குப் பிறகு இறங்கிய அவர், டாக்சியில் சாங்கி விமான நிலையம் சென்றார். அங்குதான் இந்தியா திரும்ப விமான டிக்கெட்டு வாங்க முயன்றிருக்கிறார். ஆனால் டிக்கெட்டு கிடைக்கவில்லை.
நான்கு மணிநேரம் விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த அவரை போலிசார் பிடித்தனர். மறுநாள் அவருக்கு கொவிட்-19 கிருமி உறுதி செய்யப்பட்டது.
குணம் அடைந்த பின்னர், ஜூன் 8ஆம் தேதி தங்கு விடுதிக்குத் திரும்பிய பாலச்சந்திரனுக்கு, 14 நாள் விடுப்பு அளிக்கப்பட்டது. அந்நேரத்தில் அவர் எங்கும் செல்லக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் ஜூன் 16ம் தேதி, இந்தியா திரும்பும் எண்ணத்தில் தங்கும் விடுதியை விட்டு பெட்டிகளுடன் வெளியேறினார். மீண்டும் விான நிலையத்துக்குச் சென்றவருக்கு, மீண்டும் டிக்கெட்டு கிடைக்கவில்லை.
விமான நிலையத்தில் தூங்கிவிட்டு தெம்பனிசில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு உறவினரிடம் உண்மையைச் சொல்ல, அவர் பாலச்சந்திரனின் மேல் அதிகாரியைத் தொடர்புகொண்டார். போலிசார் பின்னர் அவரை அந்த வீட்டிலிருந்து கொண்டு சென்றனர்.
இந்த வழக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்று வருணித்த அரசாங்கத் துணை வழக்கறிஞர் நார்மன் இயூ, ஊழியர் தங்குவிடுதிக்கோ மருத்துவமனைக்கோ திரும்பாமல், அவர் சாங்கி விமான நிலையத்தில் சுற்றித் திரிய முடிவு செய்ததைச் சுட்டிக்காட்டினார். அதன்வழி கொவிட்-19 கிருமியைப் பரப்பும் அபாயத்தை அவர் அதிகரித்தார் என்று கூறினார்.

