சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில், வெள்ளை காண்டடாமிருகங்கள் வசிக்கும் பகுதிக்குள் சாகச செயல் புரிந்த 19 வயது வீ யீ காய் மீது நேற்று நீதிமன்றத்தில் சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி, பிற்பகல் 2.40 மணி அளவில் வீ காண்டாமிருகத்தின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
குறும்புச்செயல் புரிந்த மேலும் இரு குற்றச்சாட்டுகளும் வீ மீது சுமத்தப்பட்டன.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில் புக்கிட் தீமா சாலையை அடுத்து சிக்ஸ்த் அவென்யூவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு தகவல் பதாகையை அடித்து உடைத்ததில் $900 சேதத்தை வீ ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் காலை அருகிலுள்ள சிக்ஸ்த் கிரசென்ட்டில் இரு கார்களின் பக்கவாட்டு கண்ணாடியை அவர் உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு கிட்டத்தட்ட $2,800 சேதத்தையும், ஒரு பிஎம்டபிள்யூ காருக்கு $1,600க்கும் அதிகமான சேதத்தையும் ஏற்படுத்தியதாக வீ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, மாலை 5.40 மணி அளவில், சம்பவம் குறித்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகார் அளித்திருந்ததாக போலிஸ் கூறியது.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் வீ அத்துமீறி நுழைந்து சாகசச் செயல் செய்த காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போது அக்காணொளியை 33,000 பேர் பின்தொடர்ந்தனர்.
இத்தகைய சாகசங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் மக்களை வலியுறுத்தியது.
வீக்கு நேற்று $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டது. வழக்கு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் வரை சிறை, $1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சேதம் விளைவித்த குற்றத்துக்கு $2,000வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் மூன்று முதல் எட்டு பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு குறும்புச் செயலுக்கும், ஓராண்டுவரை சிறையும், அபராதமும் விதிக்கப்படலாம்.