தேசிய மரபுடைமைக் கழகம் 21வது வரலாறு அறியும் வழித்தட உலாவைத் தொடங்கி இருக்கிறது. இதில் செம்பவாங் இடம்பெறுகிறது. அந்த வட்டாரத்திற்கே உரிய பிரிட்டன் கடற்படை மற்றும் அந்தக் கால சமூக வரலாறுகள் அதில் இடம்பெறுகின்றன.
ஏராளமான ஆய்வுகளின் விளைவாக அந்த உலாவில் 31 இடங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அவற்றில் செம்பவாங் வெந்நீர் ஊற்று பூங்காவும் ஒன்று. அந்த இடங்களைச் சென்றடைந்து வரலாறுகளைத் தெரிந்துகொள்ள மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வழித்தடத்தையும் பூர்த்தி செய்ய இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும்.
வழித்தடம் வழியாகச் சென்றால் பிரிட்டிஷ் கடற்படைத்தளத்தில் பல்வேறு நில அடையாளங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதோடு மட்டுமின்றி பள்ளிவாசல்கள், கோயில்கள், கடலோர கிராமங்கள் போன்ற சமூக இடங்களையும் அறிந்துகொள்ளலாம்.
அந்த வரலாற்று உலா நேற்று தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சரியான நேரத்தில் இது இடம்பெறுகிறது என்று இந்தக் கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகி ஆல்வின் டான் தொடக்க நிகழ்ச்சியில் கூறினார். இந்தக் கழகம் இணையம் வழியாக மூன்று செம்பவாங் சமூகக் குழுக்களுடன் சேர்ந்து செயல்பட்டு பல தகவல்களையும் படங்களையும் திரட்டி அவற்றை இந்த உலாவில் உள்ளடக்கி இருக்கிறது.
roots.sg என்ற முகவரியில் மேல் விவரங்களை அறியலாம்.