சிங்கப்பூரில் செயல்படும் உடற்பயிற்சி, உடலுறுதி நிலையங்களுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இருந்தாலும் அந்த நிலையங்களில் பலவும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
உள்ளரங்கு நடவடிக்கைகள், முகக்கவசம் இல்லா விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஐந்து பேர் வரை குழுவாகக் கலந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கு, வெளிப்புற வகுப்புகளில் கலந்துகொள்வோர் வரம்பு அளவு 50 பேராகக் கூடி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதை அடுத்து உடலுறுதி தொழில்துறை நிம்மதி பெருமூச்சுடன் நம்பிக்கையுடன் திகழ்வதாகத் தெரிகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த 'லேப் ஸ்டுடியோஸ்' என்ற யோகா நிலையத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான திருவாட்டி ஜாஸ்மின் சோங், புதிய வழக்க நிலை எட்டப்பட்டுள்ளது என்று தான் கருதுவதாகக் கூறினார்.
அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். தொடர்ந்து பொருளியல் திறந்துவிடப்பட்டு மேலும் பல நிலையங்கள் திறக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது முதலாவது நடவடிக்கை என்றும் அடுத்த நடவடிக்கை களைக் காண தாங்கள் மிகவும் ஊக்கத்துடன் இருப்பதாகவும் திருவாட்டி ஜாஸ்மின் சோங் குறிப்பிட்டார்.

