இந்தோனீசியாவில் கொவிட்-19 பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதற்குமுன் இல்லாத வகையில் அந்நாட்டில் நேற்று 47,899 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 864 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் இந்தோனீசியாவிற்குக் கைகொடுக்க சிங்கப்பூர், இந்தோனீசிய நிறுவனங்கள் கைகோத்துள்ளன.
அவ்வகையில், தெமாசெக் அறநிறுவனம், இரு நாடுகளையும் சேர்ந்த 15 நிறுவனங்களுடன் சேர்ந்து 11,000 உயிர்வாயுச் செறிவூட்டிகளை இந்தோனீசியாவிற்கு நன்கொடையாக வழங்குகிறது. முதற்கட்டமாக 1,500 செறிவூட்டிகள் இன்றைக்குள் இந்தோனீசியாவைச் சென்றடையும். எஞ்சியவை கட்டங்கட்டமாக வரும் வாரங்களில் அனுப்பி வைக்கப்படும் என்று தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஆறு கொள்கலன் திரவ உயிர்வாயு, உயிர்வாயுச் செறிவூட்டிகள், உயிர்வாயுக் கலன்களை வரும் நாள்களில் ஜகார்த்தாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனீசியாவில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக, தொழிற்சபை நடவடிக்கை எடுத்து வருவதாக (சிங்சேம்) அதன் துணைத் தலைவர் ஜோயல் ஷென் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தோனீசியாவிற்கு 1,000 உயிர்வாயுச் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்குவதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
"கைகோத்துச் செயல்படுவதன்மூலம், ஆக மோசமான கொவிட்-19 பரவலில் இருந்து விரைவில் மீள முடியும் என நம்புகிறோம்," என்று டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தோனீசியாவுடன் வலுவான உறவுகொண்டுள்ளதைக் குறிப்பிடும் விதமாக, கடந்த வாரம் மருந்துப் பொருள்கள் அடங்கிய இரு விமானங்களைச் சிங்கப்பூர் அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது.

