செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5196723d-9298-43ad-894d-afb34c8e5d7b
-

அதிக ஊதியம் தரத் தயார்; ஆயினும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை

அதிக ஊதியம் தருவதாகக் கூறினாலும் வேலைக்கு ஆள் கிடைப்பதில் உணவு, பானக் கடைகள் தொடர்ந்து சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. பல கடைகளிலும் 20% முதல் 30% வரை ஆட்பற்றாக்குறை நிலவுவதாகச் சிங்கப்பூர் உணவகச் சங்கம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 பரவலால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்கள் வருகை குறைந்துபோனது. இது நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. உணவு, பான நிலையங்கள் உள்ளிட்ட சேவைத் துறை நிறுவனங்கள் 35% அளவிலேயே வெளி நாட்டு ஊழியர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும். அத்துடன், நீண்ட நேரப் பணி என்பதாலும் உடலுழைப்பு தேவைப்படுவதாலும் உணவு, பானத் துறையில் வேலைக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பதாக 'நெக்ஸ்ட்' வாழ்க்கைத்தொழில் ஆலோசனைக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பால் ஹெங் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தொண்டூழிய ஆதரவு தொடர்கிறது

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொவிட்-19 பரவல் தணிந்துள்ளபோதும் அவ்வூழியர்களுக்குத் தொண்டூழியக் குழுக்கள் வழங்கிவரும் ஆதரவு குறையவில்லை. சிங்கப்பூர் சமூகத்துடன் வெளிநாட்டு ஊழியர்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக 'வெல்கம் இன் மை பேக்யார்ட் (விம்பி)', 'கொவிட்-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணி (சிஎம்எஸ்சி)' ஆகிய தொண்டூழிய அமைப்புகள் தெரிவித்தன. தனது முதலாண்டு நிறைவை ஒட்டி, ஆறு அடுமனைகளில் (பேக்கரி) இருந்து பெறப்பட்ட, வேக வைக்கப்பட்ட உணவுப்பொருள்களை நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓர் விடுதிக்குக் கொண்டு சேர்த்தது. வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் உணவு வகைகளைச் சுவைக்கவும் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உணவுக்கடைக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் 'வீ ஈட்' எனும் திட்டத்தை ஷபீர் மியூசிக் ஏஷியா குழுவுடன் சேர்ந்து 'சிஎம்எஸ்சி' குழு ஏற்பாடு செய்துள்ளது.

கைதிகளுக்குத் தொண்டூழியம் புரிவோர்க்கான பயிற்சி மேம்பாடு

இப்போதைய கைதிகளுடனும் முன்னாள் குற்றவாளிகளுடனும் சேர்ந்து பணியாற்றும் தொண்டூழியர்களுக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கேதுவாக, சிங்கப்பூர் சிறைத்துறை தனது கைதிகள் மறுவாழ்வுப் பணியாளர் மேம்பாட்டுக் கட்டமைப்பின்கீழ், வகுப்பறையில் மட்டுமின்றி, இணையவழிக் கற்றல், இணையக் கருத்தரங்கு போன்ற வழிகளிலும் பயிற்சிகளை நடத்தும் வகையில் புதிய பயிற்சி வகுப்புகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு அரசாங்கம் முழுவதுமாக நிதியுதவி வழங்கும்.